பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தகவல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் – எஸ்பி தகவல்
✍18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியரிடம் பாலியியல் செயல்பாடு என்பது குற்றமாகும். இதற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை” விழிப்புணர்வு சுவரொட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒட்டி துவக்கி வைத்தார்.
✍18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவன், சிறுமியரிடம் பாலியியல் செயல்பாடு என்பது குற்றமாகும். இதற்கு மரண தண்டனை விதிக்கலாம், இதை யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம். தொடர்புக்கு: 1098 அல்லது காவல்துறை அவசர தொலைபேசி 100 என்ற வாசகம் அடங்கிய எச்சரிக்கை சுவரொட்டியை தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறை, சென்னை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை சுவரொட்டியை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒட்டப்படும். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (16.09.2020) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் நுழைவாயில் பகுதியில் ஒட்டி துவக்கி வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில்,
தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வகையான குற்றங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக 18 வயதிற்குட்டப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு போக்ஸோ எனும் சட்டம் உள்ளது. இச்சட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வரை பெற்று கொடுக்க வழிவகை உள்ளது. மேலும் இச்சட்டத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்தாலும், கிராமபுரங்களுக்கு இவ்வகையான குற்றங்களுக்கு சட்டம் உள்ளது எனும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் நோக்கமே கிராமபுரங்களுக்கும் இவ்விழிப்புணர்வை கொண்டு செல்ல வேண்டும் என்பதாகும். இது பற்றி உடனே புகார் மற்றும் தகவல் தெரிவிக்க 1098 என்ற தொலைபேசி எண்ணை அல்லது காவல்துறை அவசர உதவி எண் 100ஐ தொடர்பு கொள்ளலாம். தகவல் தெரிவிப்பவர்கள், அவர்களைப் பற்றிய விபரம் சொல்லத் தேவையில்லை. அவ்வாறு தெரிவித்தாலும், அவர்களைப் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவதே நமது நோக்கமாகும் என்று கூறினார்.
18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களிடம் பாலியியல் செயல்பாடு என்பது மிகப்பெரிய குற்றமாகும், இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாம் என்ற எச்சரிக்கை அறிவிப்பு வந்துள்ளது. இந்த எச்சரிக்கை சுவரொட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் ஒட்டப்படுவதுடன், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மூலம் பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கையை அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்த எச்சரிக்கை சுவரொட்டி ஒட்டும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தகோபி, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ஜோதி குமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மீஹா, தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கபசுர குடிநீர் வழங்கினார்.