தலித்துக்கு முடிவெட்ட மறுத்த சலூன்காரர் – அரசே புதிய சலூன் கடையை திறந்து அதிரடி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தலித்துக்கு முடிவெட்ட மறுத்த சலூன்காரர் – அரசே புதிய சலூன் கடையை திறந்து அதிரடி
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டவடா பஞ்சாயத்துக்கு உட்பட பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள வணிக வளாகத்தில், அரசு சார்பில் சலூன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையை, தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் அண்மையில் திறந்து வைத்தார்.
அரசு சார்பில் நடத்தும் இந்த சலூன் கடையில், 13 பேர் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அதில் 8 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், 5 பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அருந்ததியினரும் தலைமுடி மற்றும் முகச்சவரம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அருந்ததியினருக்கு முடிவெட்ட மறுத்தாக சலூன்காரர் மீது புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், வட்டவடா பஞ்சாயத்து தலைவருமான ராமராஜ் விசாரணை மேற்கொண்டார். பின்னர், சலூன் கடைக்காரர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்ததுடன், கடைகளை அடைக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, பஞ்சாயத்து சார்பில் கோவிலூர் பகுதியில் புதிய சலூன் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு எந்தவித பேதமில்லாமல் அனைவருக்கும் முடி வெட்டப்படும் என்றும், மற்ற சலூனில் வசூலிக்கப்படும் கட்டணமே வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.