இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று பிரதமர் மோடி திட்டவட்டம்.முழு விவரம் – விண்மீன்நியூஸ்
இந்தியாவுக்குள் சீனா ஊடுருவி எந்த ஒரு நிலையையும் ஆக்கிரமிக்கவில்லை;
இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார்.
லடாக் எல்லையில் சீனாவுடனான மோதல் தொடர்பாக பிரதமர் மோடி இன்று அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவுக்குள் சீனா ஊடுருவவில்லை. இந்தியாவின் எந்த ஒரு நிலையையும் சீனா ஆக்கிரமிக்கவும் இல்லை. எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்திருக்கின்றனர். இதற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறோம். ஒட்டுமொத்த தேசமும் நமது ராணுவ வீரர்களின் பின்னால் இருக்கிறது.
நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
எல்லை மோதல்- உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? அனைத்து கட்சி கூட்டத்தில் சோனியா சரமாரி கேள்வி
நமது எல்லைகளை நமது முப்படைகள் முழுவீச்சில் பாதுகாக்கும் திறனை பெற்றிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். முப்படைகளுக்கும் நவீன தளவாடங்களை வழங்கி இருக்கிறோம். நமது நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
இந்தியா எப்போதும் அமைதியையும் நட்பையும் விரும்புகிறது. அதேநேரத்தில் தேசத்தின் இறையாண்மைதான் அத்தனையையும்விட முதன்மையானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.