மனிதஉரிமை மீறல்கள் சார்ந்த வாழ்வியல் நூலின் சிறந்த கருத்துக்கள் “சோளகர் தொட்டி”
மனித உரிமை மீறல்கள் சார்ந்த வாழ்வியல் நூலின் சில வரிகள் வாசிப்பை நேசிப்பவர்களுக்காக…..
சோளகர் தொட்டி
நாகரீகத்தின் பலனாய் தற்போது விளைந்திருக்கும் சீரழிவுகளுக்கு உட்படாத உண்மையும் எளிமையும்…
இயற்கை வளங்களோடு இணைந்த பழங்குடித் தமிழர்களின் வாழ்வியலை…
வீரப்பன் தேடுதல் வேட்டையில் சிக்கி சிதைந்து போன துன்பியல் நிகழ்வுகளை இலக்கியப் படைப்பாக செதுக்கி இருக்கிறார் நூலாசிரியர்!
பன்முகத் தன்மை பெற்ற இவர் மக்கள் குடி உரிமை கழகச் செயலர். சமூக வழக்கறிஞர். மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளில் மிக முக்கியமானவர் எழுத்தாளர் ச. பாலமுருகன் அவர்கள்!
வீரப்பன் உலாவிய காடுகளில் வாழ்ந்த பழங்குடி தமிழர்களே சோளர்கள்!
தொட்டி என்பது அவர்கள் வாழும் ஊரின் பெயர். அடர்ந்த வனம் சார்ந்த சிற்றூர்!
தமிழகத்தின் கருநாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடி மக்களைப் பற்றிய வாழ்வியல் நூல்!
இந்தப் பழங்குடி மக்கள் தேவைக்கு மேல் எதையும் தேடிக் கொள்ளாத எளிமையான கூட்டு சமூகமாக வாழ்ந்து வருபவர்கள்!
சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அரசு இயந்திரங்களின் கொடூர அடக்குமுறையால்…
சமூகம் தந்த பல நிகழ்வுகளால் தங்கள் வாழ்வை நேசித்த மண்ணைத் தொலைத்தவர்கள் என்பதற்கு இந்நூலே சாட்சி!
தங்களின் விளை நிலங்களிலிருந்து அன்னியராகப் பட்டவர்கள்!
தாய் வீடு போலிருந்த வனத்திற்குள் சுதந்திரமாக செல்ல முடியாத அளவிற்கு அரசின் அணுகுமுறைகளால்….
இவர்கள் இதுவரை வாழ்ந்த மண்ணின் தொப்புள் கொடி உறவை இழந்து சின்னாபின்னமாகி சீரழிக்கப்பட்டவர்கள்!
மனித உரிமை மீறல்களால் பல கொடுமைகளை சந்தித்து வாழ்ந்தவர்கள்!
ஏறத்தாழ முன்னூறு பக்கங்களில் இவர்களின் சிதைந்து போன துன்பியலை வாசித்தால்…
கலங்காத மனமும் கலங்கி விடும்!
மீண்டும் நாம் நம்முடைய இயல்பு நிலைக்கு திரும்ப சற்றே காலதாமதம் ஆகும்!
ஏனெனில் அந்த மலையில் நடந்து முடிந்திருக்கும் கொடூரங்கள் பயங்கரமானவைகள்! சித்திரவதைகள் மனதைப் பிழிகிறது! நெஞ்சை சுடுகிறது!
விலை மதிப்பற்ற வனச்செல்வங்களை பரிவோடும் அக்கறையோடும் பாதுகாத்து அதனுள் எளிய வாழ்க்கை…
நடத்தி வந்த பழங்குடி மக்களை அதிரடியாக தங்களது முகாம்களில் அடைத்து வைத்து…
நினைத்தே பார்க்க முடியாதவைகள் நடந்த சித்திரவதை செயல்கள்! கற்பனைக்கும் எட்டாதவைகள்!
கண்ணில் கண்டவர்களை எல்லாம் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து….
மிருகத்தனமாக தாக்கி பலரையும் நிரந்தர ஊனமாக்கியும், சிலரைக் கொன்றும் நடந்தவைகள் கொஞ்ச நஞ்சமல்ல!
இவர்களின் வேதனைகள் பாறையை விட கனமானவை!
நெருப்பினை விட மிகுந்த வெப்பமானவை!
இவர்களின் வாழ்வியல் பக்கங்கள் இருளை விட கருமை மிக்கவை!
இந்த நூலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாசித்து இருந்தால்…
அதிரடிப்படைக்கு அளித்த அத்தனை பாராட்டுப் பரிசு பதக்கங்களைத் திரும்பப் பெற்றிருப்பார்!
உங்கள் கைகளில் தவலும் இந்நூல் மிக குறுகிய காலத்திலேயே பனிரெண்டாம் பதிப்பாக மிளிர்கிறது!
தமிழ் கூறும் நல்லுலகிற்கு பெரிய எழுத்துகளில் மிதமான விலையில் தரமான முறையில் பதிவிட்டிருக்கும் பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்!
சமீப காலங்களில் இலக்கிய படைப்பாளிகள், வாசகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என யாரைச் சந்தித்தாலும்…
இந்நூலை வாசித்தீர்களா…? என்ற கேள்வியும் இல்லையெனில் உடனடியாக வாங்கி வாசியுங்கள்….
என்ற பரிந்துரையும் பாராட்டும் ஒருங்கே பெற்ற நூலிது!
இதுபோன்ற நூல்களை வாசிப்பதின் மூலமாக பழங்குடி தமிழ் மக்களை நேசிக்கத் தோன்றும்!
விழித்திருக்கும் போதெல்லாம் நல்ல நூல்களை வாசித்துக் கொண்டிருப்போம்!
இனியாவது வாசிக்கும் தலைமுறைகளை வார்த்தெடுப்போம்.