வேறொருவருடன் தொடர்பால் ஆத்திரம்; தாலியால் இறுக்கி இளம்பெண் கொலை: காதல் கணவர் குழந்தைகளுடன் தப்பி ஓட்டம்? தூத்துக்குடியில் பயங்கரம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடியில் வேறொருவருடன் தொடர்பால் ஆத்திரம்; தாலியால் இறுக்கி இளம்பெண் கொலை: காதல் கணவர் குழந்தைகளுடன் தப்பி ஓட்டம்
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி ஜாகீர்உசேன் நகரைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (33). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முருகவள்ளி (28). இவர்களுக்கு தமிழ்செல்வன் (6), ரபிஷா (2) ஆகிய குழந்தைகள் உள்ளனர். சண்முகராஜ் இதற்கு முன்பு தூத்துக்குடி இந்திரா நகரில் தங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். விளாத்திகுளம் அருகே நரிப்பையூருக்கு வேலைக்கு சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த முருகவள்ளியுடன் காதல் ஏற்பட்டது.
7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தூத்துக்குடி ஜாகீர்உசேன் நகரில் முருகவள்ளியை தனி வீடு எடுத்து சண்முகராஜ் குடியமர்த்தினார். திருமணத்திற்கு பின்னர் முருகவள்ளி வேலைக்கு செல்லவில்லை. 7 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முருகவள்ளிக்கு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சண்முகராஜ் அவரை கண்டித்தார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் அந்த நபருடன் செல்போனில் பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு 12.30 மணிக்கு சண்முகராஜூக்கும், முருகவள்ளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முருகவள்ளியை, சண்முகராஜ் சரமாரியாக அடித்து உதைத்தார். இதனால் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களை அழைத்து தன்னை காப்பாற்றும்படி கூறினார். அவர்கள் வெளியே வருவதற்குள் சண்முகராஜ், முருகவள்ளியை சமாதானப்படுத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். இன்று காலை 8.30 மணி ஆகியும் வீட்டிலிருந்து முருகவள்ளி வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்தபோது கதவு ெவளிப்புறமாக வெறுமனே தாழ்ப்பாள் போடபட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் முருகவள்ளி கழுத்தை தாலிக் கயிறால் இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேஷ், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் பிரேமா, எஸ்ஐ விஜயகுமார் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு திரவியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகவள்ளியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் முருகவள்ளியை தாலிக் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சண்முகராஜ் தப்பிச் சென்றது தெரியவந்தது. தலைமறைவான அவரை தாளமுத்துநகர் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் பெண்ணை கணவரே கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.