திமுகவால் உள்ளாட்சித்தேர்தலை நிறுத்தமுடியாது?முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி?
தி.மு.க.வால் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முடியாது – முதலமைச்சர்.
உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க.வால் நிறுத்த முடியாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்டு, மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். திருப்பத்தூர் மாவட்டத் தொடக்க விழா தொன்போஸ்கோ நகரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதன்மூலம் தமிழகத்தின் 35ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் உதயமானது.
அதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழா அங்குள்ள கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தின் 36ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டை உதயமானது.
மாவட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார். உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றம் மூலம் நிறுத்த தி.மு.க. முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர், எக்காரணம் கொண்டும் தேர்தலை நிறுத்த முடியாது என்று தெரிவித்தார்.