கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் லாட்டரியில் பணம் மற்றும் கார் பரிசு விழுந்ததாக கூறி ஜான்சி என்ற பெண்ணிடம் ரூ.61 லட்சத்தை மோசடி செய்த கேரள வாலிபர் கைது, சிறையில் அடைப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
லாட்டரியில் பணம் மற்றும் கார் பரிசு விழுந்ததாக கூறி கோவில்பட்டி பெண்ணிடம் ரூ.61 லட்சத்தை மோசடி செய்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரியில் பரிசு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்தவர் லூர்துராஜ். இவருடைய மனைவி ஜான்சி (வயது 52). இவரது மகளின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் கடந்த 13.1.2022 அன்று லாட்டரியில் ரூ.25 லட்சம் பரிசு விழுந்து இருப்பதாக குறுந்தகவல் வந்தது.
இதனை பார்த்த ஜான்சி, அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசியவர், பரிசு தொகையை பெற ஆதார் எண் உள்ளிட்ட இதர விவரங்களை கேட்டு பெற்று உள்ளார். மேலும் பரிசு தொகையை பெறுவதற்கு பதிவு கட்டணம், ஜி.எஸ்.டி., வருமானவரி உள்ளிட்டவை செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
ரூ.61 லட்சம் மோசடி
அதன்பிறகு மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் ரூ.1.5 கோடி மதிப்பிலான கார் பரிசாக விழுந்து இருப்பதாகவும், அதனை பெற ரூ.50 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதனை நம்பிய ஜான்சி பணம் மற்றும் காரை பெறுவதற்காக மொத்தம் ரூ.60 லட்சத்து 97 ஆயிரத்து 200-ஐ மர்ம நபரின் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார். அதன்பிறகு மர்மநபரை தொடர்பு கொண்டபோது முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜான்சி, ஆன்லைன் மூலம் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில், தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
கேரள வாலிபர் கைது
அதில், இந்த மோசடியில் ஈடுபட்டது கேரளா மாநிலம் எர்ணாகுளம் முண்டன்வெளியைச் சேர்ந்த ஏசுதாஸ் ஜான் மகன் சான்டலிஸிஸ் ஜான் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் கேரளா விரைந்து சென்று, சான்டலிஸிஸ் ஜானை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனையும் பறிமுதல் செய்து, தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சான்டலிஸிஸ் ஜான் பல்வேறு நபர்களை ஏமாற்றி இருப்பது தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.