பெரும்பரபரப்பு 11பேரை பலிகொண்டவிசாகப்பட்டிணம் ஆலையில் நள்ளிரவில் மீண்டும் விசவாயுகசிவு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
11 பேரை பலி கொண்ட விசாகபட்டினம் ஆலையில் நள்ளிரவில் மீண்டும் விஷ வாயு கசிவு.. பெரும் பரபரப்பு.
விசாகபட்டிணம்: 11 பேரை பலிகொண்ட, ஆந்திரா மாநிலம், விசாகபட்டிணம், ரசாயன ஆலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், விஷ வாயு கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், ஆர்.ஆர்.வெங்கடாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியின் அருகே, தென் கொரியா நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலை உள்ளது. ஊரடங்கு காரணமாக, இந்த தொழிற்சாலை மூடப்பட்டிருந்தத நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, இந்த தொழிற்சாலையை, மீண்டும் திறப்பதற்கான பணிகளில், வியாழக்கிழமை அதிகாலை தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தொழிற்சாலையிலிருந்து, ‘ஸ்டைரீன்’ வகை விஷவாயு கசிந்தது. இது காற்றில் சுமார் 3 கிலோ மீட்டர் துாரம் பரவியது. இதனால், சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.
ஊரடங்கு
இதையடுத்து மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிச் சென்றனர். சாலையிலேயே அவர்கள் வாயில் நுரை தள்ளி, மயங்கி விழுத்தனர். 5,000 டன் கொள்ளளவு கொண்ட டேங்கிலிருந்து வாயு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக, இந்த டேங்குகள் பராமரிக்கப்படாத நிலையில், வேதியியல் மாற்றத்தால் வெப்பம் ஏற்பட்டு, வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
11 பேர் பலி
விஷவாயு கசிந்து பரவியதில், ஒரு குழந்தை உட்பட 11 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் அதிகமானோர், சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
நள்ளிரவில் மீண்டும் விஷவாயு
ஆனால், இத்தோடு நிலைமை சரியாகவில்லை. வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் திடீரென மீண்டும், அதே ஆலையின் டேங்கரிலிருந்து விஷவாயு கசிந்துள்ளது. புகை மூட்டம் வெளியேறி, அது இரவிலும் தெளிவாக பார்க்கும் அளவுக்கு தெரிந்தது. இதையடுத்து, சுமார் 50 தீயணைப்பு ஊழியர்கள், பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவசர வெளியேற்றம்
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக 2-3 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்களில் வசிப்போர் அவசரமாக வெளியேற்ற உத்தரவிடப்பட்டனர். இந்த தகவலை விசாகப்பட்டினம் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சந்தீப் ஆனந்த் தெரிவித்தார். 2 நுரை மூலமான தீயணைப்பு வண்டிகள் உட்பட மேலும் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், அவசரநிலையை சமாளிக்க ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன என்றும், சந்தீப் ஆனந்த் தெரிவித்தார். தொடர்ந்து விஷ வாயுவை கட்டுப்படுத்தும் பணியில் இரவு முழுக்க அதிகாரிகள் ஈடுபட்டனர்.