11ம்வகுப்பு மாணவியை அவருடைய நண்பரே பாலியல் பலாத்காரம் கோயமுத்தூரில் அதிர்ச்சி சம்பவம்?
கோயம்புத்தூரில், பிறந்தநாள் கொண்டாடிய 11 ஆம் வகுப்பு மாணவியை அவருடைய நண்பரே பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவத்திற்கு காரணமானவன் தலைமறைவாகிவிட, உடந்தையாக இருந்த 4 இளைஞர்கள், போக்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில், 11ஆம் வகுப்பு மாணவி, கடந்த 26ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது அழைப்பின் பேரில் அங்கு சென்ற ஆண் நண்பர்கள் 6 பேர் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் இரவு 9 மணியளவில் பிறந்தநாளை கொண்டாடியதாகச் சொல்லப்படுகிறது.
அந்த மாணவியின் நெருங்கிய நண்பரான மணிகண்டன் என்பவன், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை மற்றொருவன் தனது செல்போனில் படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மற்ற நான்கு பேர், பூங்காவிற்கு யாராவது வருகிறார்களா? என இந்த படுபாதகச் செயலுக்கு காவல் காத்துக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. சம்பவத்திற்கு பின்னர், வீட்டிற்குச் சென்ற மாணவி, நம்பிச் சென்ற ஆண் நண்பர்களால், தமக்கு நேர்ந்த கொடூரத்தை தனது பெற்றோரிடம் கூறி அழுது தீர்த்திருக்கிறார்.
மாணவிக்கு ஆறுதல் கூறிய பெற்றோர், உடனடியாக அளித்த புகாரின்பேரில், மணிகண்டன் உட்பட 6 பேர் மீது, கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த மாணவியின் நண்பர்களான, ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயண மூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பதினொன்றாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் அவனது நண்பன் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற சீரநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா நகர் சிறுவர் பூங்காவின், பின்புற பகுதியில், புதர் மண்டி கிடக்கிறது. இதனால், அங்கு யாரும் வருவதில்லை என, அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
பூங்காவிற்கு எதிரே தண்ணீர் தொட்டியும், பாழடைந்த கோயில் பணிகளும் நடப்பதால் ஆள் அரவமற்ற பகுதியாக அது உள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரும் அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், திட்டமிட்டே, 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியை அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பதாக, காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.