முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்தால் சர்வதேச அளவில் பெரிய தாக்கம் ஏற்படும் ஐகோர்ட்டில் மத்தியரசு விளக்கம் ?
7 பேரையும் விடுதலை செய்தால் சர்வதேச அளவில் பெரிய தாக்கம் ஏற்படும்.. ஹைகோர்ட்டில் மத்திய அரசு.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதில், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்த நிலையில் அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி இருந்தார்.
அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாளே தன்னை விடுவிக்காமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன்,
நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அனுமதி கேட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு அனுப்பிய மனுவை கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரித்து விட்டதாக கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், நாட்டின் பிரதமர் உட்பட 15 பேரை கொன்ற வழக்கில் தொடர்புடைய இவர்களை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது போன்று கொடூர குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்களை விடுவித்தால் அது மற்ற கைதிகளுக்கு சாதகமாகி விடும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதிகள் இது தொடர்பாக ஜனவரி 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.