குடியுரிமை சட்டத்திருத்தம் பாஜக ஏன் கொண்டு வந்தது? விவரிக்கிறது விண்மீன் செய்தி?
குடியுரிமை சட்டத்திருத்தம் ஏன் கொண்டு வரப்பட்டது?
குடியுரிமை மசோதாவை பாஜக கொண்டு வந்தது ஏன் என்று விவரிக்கிறது இந்த செய்தி…
1947ல் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபின், முஸ்லீம் அல்லாத குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்ததால், இந்தியாவுக்கு அவர்கள் குடிபெயர்ந்தனர்.
பிரிவினைக்குப் பின் சுமார் 47 லட்சம் இந்துக்கள், சீக்கியர்கள் இந்தியாவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் 1998 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 39 லட்சம் இந்துக்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதத்திற்கும் குறைவாகும்.
அதே போன்று 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் விடுதலை பெற்ற போது, பாகிஸ்தான் ராணுவத்தினரின் கொடுமைகளுக்கு ஆளாகி பெருமளவிலான இந்துக்கள் இந்தியாவிற்கு வந்து குவிந்தனர். வங்கதேசத்தில் தற்போது ஒரு கோடியே 40 லட்சம் இந்துக்கள் வசிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின மொத்த மக்கள் தொகையில் எட்டரை சதவீதமாகும்.
ஆப்கானிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வாழ்ந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஆயிரமாக சுருங்கி விட்டது. மத ரீதியான துன்புறுத்தலால் பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கும், ஐரோப்பா, வட அமெரிக்கா நாடுகளிலும் அடைக்கலமாகி விட்டனர்.
1979 ஆம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சியின் போதே குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு எழ தொடங்கி விட்டது. 6 ஆண்டுகளாக நீடித்த போராட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து தான், 1985 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி ஆட்சியில் அசாம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
2012 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் ஆட்சியின் போது, அசாம் மாநில முதலமைச்சராக இருந்த காங்கிரசின் தருண் கோகய், இதே சட்டத்தை அமல்படுத்துமாறு கோரி கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தவே சட்டத்திருத்தம் செய்து இருப்பதாக பாஜக விளக்கம் அளித்ததுள்ளது. ஆனாலும் அடுத்த ஆண்டு அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டே குடியுரிமை சட்டத்தை பாஜக கொண்டு வந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அசாமிலுள்ள இந்து வங்காளி வாக்காளர்கள் பாஜகவை ஆதரிப்பதும் அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்காதது தொடர்பான புகாருக்கு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தில் இஸ்லாம் மதம் கடைபிடிக்கப்படும் போது அங்கு இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம் அளித்திருந்தார்.
அதே சமயம் 1985 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அசாம் ஒப்பந்தத்தை மீறும் விதத்தில் குடியுரிமை சட்டம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது.