சேலத்தில் இடிக்க வந்த பேருந்தை ஆத்திரத்தில் காலால் எட்டி உதைத்து , தனியார் ஓட்டுநரிடம் கோபத்தை காட்டிய பெண்!
சேலம்:சேலத்தில் இடிப்பது போன்று ஓட்டிய தனியார் பேருந்து ஓட்டுநரிடம் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பக்கவாதம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மனைவி ஜமுனா, மகன் வீராசாமி.
கோவிந்தராஜுக்கு உதவித்தொகைக்காக விண்ணப்பித்து விட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மூவரும் வெளியே வந்துசாலையைக் கடக்கும்போது தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக அவர்களை இடிப்பது போன்று வந்துள்ளது. ஓட்டுநரும் வாகனத்தை வேகமாக நிறுத்தியதால் மூவரும் பயத்தில் உறைந்தனர்.
இதையடுத்து ஜமுனா அந்த பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.உடல்நலம் பாதிக்கப்பட்ட நபருடன் சாலையைக் கடக்கும்போது இடிப்பது போன்று வாகனத்தை இயக்குவதா? என்று ஆத்திரமடைந்தஜமுனா பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி பேருந்தை எட்டி உதைத்தார்.
பின்னர் அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட, காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.
கோபமடைந்த பெண்ணை காவல்துறையினர் வந்துதான் சமாதானம் செய்தார்களே தவிர சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பி வைத்தது பாதிக்கப்பட்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது