அமுல் நிறுவனத்தை தொடர்ந்து தமிழகத்தில், கர்நாடகாவின் நந்தினி பால் விற்பனை அதிகரிப்பு?
அமுல் நிறுவனத்தை தொடர்ந்து தமிழகத்தில், கர்நாடகாவின் நந்தினி பால் விற்பனை அதிகரித்துள்ளது.
ஆவின் வாயிலாக தினமும், 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இது, 40 லட்சம் லிட்டராக அதிகரித்தது. ஆவின் பால் கொள்முதலை அதிகரிப்பதற்காக, லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் பிறகும், ஆவின் பால் கொள்முதலில், பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஒரு மாநிலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனத்திற்கு எதிராக மற்றொரு மாநில கூட்டுறவு நிறுவனம், பால் விற்பனை செய்யக்கூடாது என்ற எழுதப்படாத விதி நடைமுறையில் உள்ளது.
இதனை, பல்வேறு மாநில கூட்டுறவு நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. ஆனால், குஜராத் மாநிலத்தின் அமுல் நிறுவனம், தமிழகத்தில் பால் விற்பனையை துவங்க முடிவு செய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் குளிரூட்டும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதற்கு அரசு மற்றும் ஆவின் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அமுல் திட்டம் பெரிய அளவில் செயல்பாட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில், கர்நாடகா மாநில பால் கூட்டுறவு நிறுவனமான நந்தினி வாயிலாக, தமிழகம் முழுவதும் பால் விற்பனை துவங்கியுள்ளது.
தேநீர் கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தும் வர்த்தக ரீதியான பால் விற்பனையில் கவனம் செலுத்தி வந்த நந்தினி நிறுவனம் இப்போது, ஆவின் தயாரிக்கும் மற்ற பால் வகைகளையும் தயாரித்து விற்க துவங்கியுள்ளது.
நுகர்வோரை குழப்பும் வகையில் ஆவின் பால் பாக்கெட் நிறத்திலேயே நந்தினி பால் பாக்கெட்டும் உள்ளது. டிப்போக்கள் மட்டுமின்றி, ஆன்லைன் வாயிலாக உடனுக்குடன் விற்பனை செய்வதற்கும், தனியார் நிறுவனங்களுக்குஅனுமதி வழங்கப்பட்டு வருகிறது.