கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலைஞர் உணவம் அமைப்பது தொடர்பாக… தமிழ்மாநில கட்சியின் சார்பாக கோவில்பட்டி நகர செயலாளர் ராஜகோபால் தலைமையில் கோரிக்கை மனு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பொருள்: கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலைஞர் உணவம் அமைப்பது தொடர்பாக…
கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும், உள்நோயாளிகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தங்குமிடத்தில் தங்குகின்றனர்.
காசி – கன்னியாகுமரி தேசிய நான்குவழிச்சாலையில் கோவில்பட்டி அமைந்துள்ளதால், விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் ஏழை மக்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு தனியாக செலவு செய்யும் நிலை உள்ளது.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் மக்களில் பெரும்பாலானோர் ஏழை எளியோர் ஆவர். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளவர்களுக்கு மருத்துவமனை சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களுக்கு பாதுகாப்புக்காக வருபவர்களும், புறநோயாளிகளாக வருபவர்களும் உணவுக்காக தனியார் ஹோட்டல்களையே நம்பி உள்ளனர்.
தற்போது தமிழக அரசு கலைஞர் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. கோவில்பட்டியில் ஏற்கெனவே நகராட்சி அலுவலகம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இது ஏழை மக்களின் பசியை போக்கும் அட்சய பாத்திரமாக விளங்குகிறது.
அதே போல், அரசு மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெறுபவர்களின் பாதுகாப்புக்காக தங்களது வேலை விட்டு வந்துள்ள உறவினர்களுக்கும், புறநோயாளிகளுக்கும் உதவும் வகையில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கலைஞர் உணவம் அமைக்க வேண்டும். அப்படி அமையபெற்றால், ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்பனை செய்ய முடியும். அதே போல், இரவு 7 மணி வரையும் கலைஞர் உணவகத்தை செயல்படுத்த வேண்டும். இது ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் அவர்களின் பசியை போக்கும் விதமாக அமையும்.
மேலும், அரசு மருத்துவமனை எதிர்புறம் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அமைந்துள்ளது. அங்குள்ள ஜவான் படுக்கைகளும் அரசு மருத்துவமனையில் தான் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களும் பயன்பெறுவார்கள்.