தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அரிய வகை வெள்ளை முள்ளம் பன்றி மற்றும் டாமரின்மங்கி என்ற அரியவகை குரங்கு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அரிய வகை வெள்ளை முள்ளம் பன்றி
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ஒரு வாலிபரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டிக்குள் இருந்த துணியால் ஆன கூடைக்குள் அரிய வகையான வெள்ளை நிற முள்ளம் பன்றி மற்றும் ‘டாமரின் மங்கி’ எனப்படும் வெளிநாட்டு குரங்கு குட்டி இருந்தது.
இதுபற்றி அந்த வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். தனது வீட்டில் வளர்ப்பதற்காக அவற்றை வெளிநாட்டில் இருந்து வாங்கி வருவதாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு துறைக்கும் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அந்த உயிரினங்களில் நோய் கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரிடம் இதுபோன்ற ஆவணங்கள் எதுவும் இல்லை.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் வெள்ளை முள்ளம் பன்றி, குரங்கு குட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் இதுபற்றி தகவல் கொடுத்தனர். அவர்களும் விமான நிலையம் வந்து விலங்குகளை ஆய்வு செய்தனர்.
முறையான மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொண்டு வந்துள்ளதால் இந்த விலங்குகள் மூலம் நம் நாட்டு விலங்குகளுக்கு வெளிநாட்டு நோய் கிருமிகள் பரவும் ஆபத்து இருப்பதால், அவற்றை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புவது சரியாக இருக்கும் என்று அவர்கள் கூறினா். இதையடுத்து முள்ளம் பன்றி, குரங்கு குட்டியை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வன விலங்குகளை கடத்தி வந்த சென்னை வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகளும், மத்திய வனஉயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.