உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி✍️ கள்ளக்காதலனுடன் கைது✍️போதையில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது
- போதையில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்
- பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கினர்
சென்னை: உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவனை உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். சூளைமேடு கண்ணகி தெருவை சேர்ந்தவர் செல்வம் (42), பெயின்டர். இவரது மனைவி விஜயலட்சுமி (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2ம் தேதி வீட்டில் உணவு சாப்பிட்ட செல்வம், திடீரென நெஞ்சு எரிச்சலுடன் மயங்கி விழுந்தார். உடனே விஜயலட்சுமி அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு கடந்த 6ம் தேதி செல்வம் உயிரிழந்தார். கணவன் உயிரிழந்த பிறகு விஜயலட்சுமி, நெற்குன்றம் மல்லிகை அவென்யூ பகுதியை சேர்ந்த மோகன் (54) என்பவருடன் சென்று விட்டார்.
இதனால், சந்தேகமடைந்த உறவினர் விரபாண்டியன் என்பவர், செல்வம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் செல்வத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், உணவில் விஷம் கலந்து உண்டதால் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, போலீசார் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். போலீசாரின் தீவிர விசாரணையில், அவர் கணவனை கொன்றதை ஒப்புக்கொணடார். அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது:
விஜயலட்சுமி வேலைக்கு மெட்ரோ ரயிலில் செல்வது வழக்கம். அப்போது மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. செல்வம் வேலைக்கு சென்ற பிறகு விஜயலட்சுமி தனது கள்ளக்காதலன் மோகனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதுகுறித்து செல்வத்திடம் அவரது மகள்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வம், மனைவியை அடித்து உதைத்துள்ளார். ஆனாலும், விஜயலட்சுமி தனது கள்ளக்காதலை விடவில்லை. செல்வம் கொடுக்கும் பணம் குடும்பம் நடத்த போதவில்லை என்பதாலும், அவர் குடிக்கு அடிமையானவர் என்பதாலும், அவரை பிரிந்து மோகனுடன் வாழ விஜயலட்சுமி முடிவு எடுத்துள்ளார்.
ஆனால், இதற்கு செல்வம் தடையாக இருப்பார் என்பதால், விஜயலட்சுமி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து செல்வத்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 2ம் தேதி மோகன் கொடுத்த யோசனைப்படி செல்வம் சாப்பிடும் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து விஜயலட்சுமி கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கிய செல்வத்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். செல்வத்தின் உறவினர்களிடம் அதிகளவில் மதுகுடித்ததால் வயிர் எரிச்சல் காரணமாக மருத்துவனையில் அனுமதித்தாக நம்பவைத்துள்ளார். பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையில் இருவரும் சிக்கியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து போலீசார் சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து, செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மற்றும் மோகனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.