கோவில்பட்டியில் இடதுசாரி கட்சியினர் பிரசார இயக்கத்தில் ஈடுபட்டனர்
கோவில்பட்டியில் இடதுசாரி கட்சியினர் பிரசார இயக்கம்
கோவில்பட்டியில் இடதுசாரி கட்சியினர் பிரசார இயக்கத்தில் ஈடுபட்டனர்.
ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.1லட்சத்து76ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரித்திட பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.18ஆயிரம் வழங்க உத்திரவாதம் செய்ய வேண்டும். வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊழியம் வழங்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., ராணுவ தளவாட தொழிற்சாலைகள், இந்திய ரயில்வே, ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேலை நாள்களை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.
விவசாயிகள், விவசாய நெருக்கடியில் இருந்து மீள கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். வயதானவர்கள் மற்றும் விதவைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும். தீப்பெட்டித் தொழிலுக்கான சரக்கு, சேவை வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்தியில் பாஜக ஆட்சியில் நிகழும் பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்கள் வேலை இழப்பு, பெரும் முதலாளிகளுக்கு வரிச்சலுகை ஆகிய மத்திய அரசின் செயலைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கோவில்பட்டி இனாம்மணியாச்சி சந்திப்பு அருகே பிரசாரம் இயக்கம் தொடங்கியது.
இந்த பிரசார இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் சரோஜா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் பிரசார இயக்கப் பயணத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அர்ஜுனன், மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் ஆகியோர் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர்கள் தெய்வேந்திரன் (கோவில்பட்டி), சாலமன்ராஜ் (கயத்தாறு), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர்கள் பாபு (கோவில்பட்டி), பொன்னுச்சாமி (கயத்தாறு) உள்பட இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் பிரசார இயக்கப் பயணத்தினர் கோவில்பட்டி பயணியர் விடுதி மற்றும் ரயில் நிலையம் அருகிலும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.