என்னாச்சு ? பின்வரிசையில் பீலாராஜேஷ்? பிரஸ்மீட் செய்த சண்முகம்?
என்னாச்சு! பின் வரிசையில் பீலா ராஜேஷ்!! பிரஸ் மீட் செய்த சண்முகம்!!!
தமிழகத்தின் பிரைம் டைமாக மாறியுள்ளது, சாயங்காலம் 6 மணிதான். யார் யார் என்னென்ன வேலை (வீட்டுக்குள்தான்) பார்த்துக் கொண்டு இருந்தாலும், அது அதை அப்படியே போட்டுவிட்டு, நியூஸ் வெப்சைட் அல்லது நியூஸ் சேனல்களை நோக்கி ஓடுகிறது கால்கள்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தினமும் அந்த நேரத்தில்தான் பேட்டியளிப்பார் என்பதுதான், இதற்கு காரணம். 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா நிலவரம் எப்படி இருக்கிறது? என்பதை அவர் அறிவிப்பதை பார்க்கவும், படிக்கவும் தான் மக்களிடையே இத்தனை பரபரப்பும்.
புயல் மற்றும் மழைக் காலங்களில், ரமணனை எதிர்பார்த்ததை போல, இந்த கொடிய கொரோனா காலத்தில், பீலா ராஜேஷின் அப்டேட்டுக்காக தமிழகமே காத்து கிடக்கும்.
இந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, பலி 239ஆக உயர்வு
பெரும்பாலானோர் அவர் சொல்லும் தகவலை கவனித்தால், சில பெண்களோ, பீலா ராஜேஷ் கட்டி வரும் சேலையை பார்த்து, சிலாகித்தனர். சமூக வலைத்தளங்களில் கூட சேலைகளின் வரைட்டியை பாராட்டி பதிவிட்டனர். ஆனால், நேற்று மாலை கதையே மாறிப்போச்சு. பீலாவுக்காக அனைத்து விழிகளும் காத்திருந்தால், மைக்கை பிடித்தது, சாட்சாத் தலைமைச் செயலாளர் சண்முகம்.
அதுவும் சீக்கிரம் நடந்துவிடவில்லை. 6 மணிக்கு பிரஸ் மீட் என எதிர்பார்த்து மீடியாக்காரர்கள் குவிந்து கிடந்தால், பீலா திடீரென சண்முகத்துடன் தீவிர டிஷ்கஷனில் இறங்கி விட்டார். இருவரும் ஏதோ ஆலோசித்தபடி இருந்தனர். இதனால் மீடியா நிருபர்கள் மட்டுமின்றி, காத்திருந்த மக்களும் ஏமாந்து போயினர். எப்போ வருவாங்க பீலா மேடம் என ஒருவருக்கொருவர் வாய் விட்டு கேட்டபடி இருந்தனர். ஏனெனில், அங்கு சண்முகத்துடன் நடந்த ஆலோசனை, மீடியாக்களை தவிர வேறு யாருக்கும் அப்போது தெரியாது.
இதன்பிறகு 20 நிமிடங்கள் தாமதமாகத்தான் பிரஸ் மீட் தொடங்கியது. வந்ததோ சண்முகம். அந்த பக்கம் வரிசையில் நின்றிருந்ததோ பீலா ராஜேஷ். தலைமைச் செயலாளர் என்பவர், ஒரு மாநிலத்தில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைவர். அவர் ஸ்பாட்டுக்கு வந்தபோதே புரிந்து விட்டது, இன்று பீலா பேச மாட்டார் என்பது. ஏனெனில் சீனியர் இருக்க ஜூனியர் பிரஸ் மீட் செய்ய முடியாது என்பது தான் எழுதப்படாத, புரோட்டோக்கால்.
அதேநேரம், சண்முகம் முதல் முறையாக மாலை நேர பிரஸ் மீட் க்கு வருகை தந்தது ஏன்? என்பது தான் அனைவரிடமும் கேள்வியாக இருந்தது. ஆரம்பத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரஸ் மீட் செய்து வந்தார். ஆனால், திடீரென அவர் வருவதை நிறுத்தி விட்டார். இதற்கு, அவரை ஐடி விங்கினர் ஓவராக புகழ்ந்து போட்ட மீம்கள்தான் காரணம் என்று ஒரு வதந்தி சுற்றி வருகிறது. இந்த நிலையில்தான், பீலா ராஜேஷ் பற்றி புகழாரம் அதிகரித்தது. இப்போது அவரும் பிரஸ் மீட் செய்யவில்லை.
பீலா ராஜேஷுக்கு எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் பாராட்டு வந்தது. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூட பாராட்டி ட்வீட் செய்தார். அதேநேரம், விமர்சனங்களும் வந்தன. குறிப்பாக, திமுக தரப்பிலிருந்து, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் வராமல் இருப்பது இடிக்கிறது. பாதிப்பு அதிகரிக்கும்போது, பொறுப்பு ஏற்க வேண்டியது அரசுதானே தவிர அதிகாரிகள் இல்லை. எனவே விஜயபாஸ்கர்தான் பிரஸ் மீட்டுக்கு வர வேண்டும் என்றனர் திமுக நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள்.
மேலும், டெல்லியிலிருந்து வருகை தந்தவர்களை மட்டும் கொரோனா பரவலுக்கு பொறுப்பாளியாக்குவது போல பீலா பேட்டி உள்ளது என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் முன் வைக்கப்பட்டன. இது எல்லாத்தையும் கூட்டி கழித்து பார்க்கும் நேரத்திற்குள், தலைமைச் செயலாளர் பேட்டியளிக்க ஆரம்பித்து விட்டார். இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. ஒருவேளை அனைத்து துறையின் பங்களிப்பும் தேவைப்படும் பிரச்சினை என்பதால் தலைமைச் செயலாளர் பிரஸ் மீட் செய்ய வந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும், இருக்கவே இருக்கு இன்று மாலை 6 மணி. அப்போது பார்த்துக் கொள்ளலாம், யார் மீடியாவில் தோன்றப் போகிறார்கள் என்பதை!