கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் பெட்ரோல்.. தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.. கன்னியாகுமரியில் ஷாக்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் பெட்ரோல்.. தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.. குமரியில் ஷாக்.!*
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் – கேரள மாநில எல்லைப்பகுதியில் உள்ள பணச்சமூடு அருகேயிருக்கும் புலியூர் சாலை பகுதியை சார்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்புறத்தில் குடிநீர் கிணறு உள்ள நிலையில், இந்த நீரை கோபியின் குடும்பத்தினர் பிரதானமாக உபயோகம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆறு நாட்களாக குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்ட நீரில் இருந்து பெட்ரோல் வாசம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கோபி, வாளியில் நீரை நிரப்பி தீ வைத்து சோதனை செய்கையில், பெட்ரோலை போல தண்ணீர் தீப்பிடித்து இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தண்ணீரில் பெட்ரோல் கலந்திருப்பதை உறுதி செய்துள்ளார். இதற்குள்ளாக இந்த தகவல் அப்பகுதி வாசிகளிடையே தீயாய் பரவ, அனைவரும் கோபியின் இல்லத்திற்கு படையெடுத்துள்ளனர். காவல் துறையினருக்கு முன்னதாகவே கோபி தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கோபியின் வீட்டிற்கு அருகே உள்ள தமிழக பகுதியில் பெட்ரோல் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் சேமிப்பு கிட்டங்கி பல அடி ஆழத்தில் நிலத்திற்கடியில் இருக்கிறது.
இந்த பெட்ரோல் சேமிப்பு கலனில் ஏற்பட்ட சேதம் காரணமாக, பெட்ரோல் வெளியேறி கோபியின் கிணற்றுக்கு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கோபியின் கிணற்றை போன்று அங்குள்ள பிற கிணறுகளும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதால், மக்கள் தங்களின் கிணறுகளை சோதனை செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.