பள்ளி மாணவர்களை, ‘செப்டிக் டேங்க்’ சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் கைது
கோலார்: கர்நாடகாவில், பள்ளி மாணவர்களை, ‘செப்டிக் டேங்க்’ சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கோலார் மாவட்டம், மாலுாரின் யலுவஹள்ளியில் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், விடுதியில் தங்கி உள்ளனர்.
சில நாட்களுக்கு முன், இப்பள்ளி வளாகத்தில், ‘செப்டிங் டேங்க்’கை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா, வார்டன் மஞ்சுநாத் ஆகியோர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
பின், சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தால், மாணவர்களை, ஆசிரியர் அபிஷேக் பிரம்பால் அடிக்கும் வீடியோவும் பரவியது. அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்படி, நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வார்டன் மஞ்சுநாத், ஆசிரியர் அபிஷேக் தலைமறைவாகி விட்டனர்.
கோலார் மாவட்ட பொறுப்பு வகிக்கும் நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ், நேற்று பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதன்பின் அவர் கூறுகையில், ”மொரார்ஜி தேசாய் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் விரைவில் இடமாற்றம் செய்யப்படுவர். தலைமறைவாக உள்ளவர்களை கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட பின், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
நேற்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான அசோக் தலைமையில் அக்கட்சி பிரமுகர்கள் பள்ளியில் ஆய்வு செய்தனர்.
பின், அசோக் கூறியதாவது:
இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடக்க வேண்டும். குழந்தைகளின் புகார்களுக்கு தீர்வு காண, உதவி எண் துவங்க வேண்டும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நீதிபதி சென்று அறிக்கை அளித்தால், பிரச்னை தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.