ராணுவ போட்டித் தேர்வில் புளூடூத் காப்பியடித்து, ஆள்மாறாட்டம் செய்து, முறைகேடு செய்த வடமாநிலத்தை சேர்ந்த 29 இளைஞர்கள் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
ஆலந்தூர்: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற ராணுவத் தேர்வில் புளூடூத் மூலம் காப்பியடித்ததோடு, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 29 வடமாநில இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னை நந்தம்பாக்கதில் ராணுவப் பள்ளியில், பாதுகாப்புத் துறையில் கீழ்நிலை பணிக்கான குரூப் – சி தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,728 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இந்நிலையில் தேர்வு அறையில் இருந்த சிலர் சிறிய அளவிலான புளூடூத் கருவியைக் கொண்டு தேர்வு மையத்துக்கு வெளியே இருக்கும் நபர்களின் உதவியுடன் விடைகளை எழுதியது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் ஒருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் நந்தம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர்கள் பயன்படுத்திய புளூடூத் கருவிகளை பறிமுதல் செய்து, 29 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் பின்னர் அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.