கோவில்பட்டி நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லையை மாற்றியமைக்க வலியுறுத்தி, அரசு அலுவலக வளாகத்தில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் நகரசெயலாளர் ராஜகோபால் தலைமையில், 21 பானைகளில் பொங்கல் வைத்து போராட்டம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த காவல்நிலையத்தின் எல்கை பரந்து விரிந்ததாகும். இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி, சிதம்பராபுரம் ஆகியவை எட்டயபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்துக்குள் உள்ளன. அதே போல் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி, விஸ்வநாததாஸ் நகர் ஆகிய பகுதிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்கைக்கு மிக அருகாமையில் உள்ளன.
இந்த பகுதிகள் அனைத்தும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன. இந்த கிராமப்புற பகுதிகளில் ஒரு பிரச்சினை என்றால், நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் இருந்து தான் போலீஸார் செல்ல வேண்டும். இதற்கு சுமார் 40 நிமிடங்கள் ஆகிவிடுகிறது. அதே போல், புகார் அளிக்க அங்குள்ள மக்கள் கோவில்பட்டியை கடந்து தான் நாலாட்டின்புதூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயண நேரம், பணம் விரயம் ஏற்பட்டு வருகிறது.
மேலும், எட்டயபுரம் வட்டத்தில் கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி, சிதம்பராபுரம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளதால் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் பின்னடைவு ஏற்படுகிறது. இதனால் போலீஸ் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப காவல்துறையில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், காவல்நிலைய எல்கை மட்டும் ஆங்கிலேயர்கள் காலம் தொட்டு அப்படியே உள்ளது. அதனால் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லையை மாற்றியமைக்க வேண்டும என கோரிக்கை விடுத்தோம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி, சிதம்பராபுரம், பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி, விஸ்வநாததாஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராம மக்கள் பயன்பெறும் விதமாக கடலையூரை தலைமையிடமாக கொண்டு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், மக்களின் மனநிலையை அதிகாரிகள் அறியும் வகையிலும் கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி அன்று காலை 21 பானைகளில் பொங்கல் வைத்து போராட்டம் நடைபெற்றது.