பிரசவ வலியால் துடித்த ஒடிசா பெண்? பிரசவம் பார்த்த ஆட்டோ சந்திரன்?அழகான ஆண் குழந்தை? ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர்? நடந்தது என்ன? முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
வலியில் துடித்த ஒடிசா பெண்.. பிரசவம் பார்த்த ஆட்டோ சந்திரன்! -கோவை நெகிழ்ச்சி
ஆட்டோ சந்திரன்
சமூகச் செயற்பாட்டாளர் ஆட்டோ சந்திரன், கோவையில் ஒடிசா மாநிலப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால், நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், பலர் பசியாலும் வறுமையாலும் வேதனையடைந்துள்ளனர். அப்படி கஷ்டப்படும் ஆதரவற்றோர், கூலித் தொழிலாளிகளுக்கு அரசுடன் இணைந்து பல்வேறு நல் உள்ளங்கள் தங்களாலான உதவிகளைச் செய்து வருகின்றனர். கோவை ஆட்டோ சந்திரனும் அதில் ஒருவர்.
சமூகச் செயற்பாட்டாளரும், விசாரணை படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான லாக் அப் நாவலின் ஆசிரியருமான ஆட்டோ சந்திரன் எனப்படும் சந்திரகுமார் ஏற்கெனவே தமிழக மக்களிடம் நன்கு பரிச்சயம். தற்போது, அவர் தமிழகத்தைக் கடந்து மனிதம் போற்றும் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார். பிரசவ வலியால் துடித்த ஒடிசா மாநிலத்தைப் பெண் ஒருவருக்குப் பிரசவம் பார்த்துள்ளார்.
என்ன நடந்தது? என்று ஆட்டோ சந்திரனிடம் பேசினோம், “16-ம் தேதி காலை நான் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள் கொடுப்பதற்காகக் கிளம்பிவிட்டேன். காமராஜர் சாலையில் உள்ள சி.பி.ஐ கட்சி அலுவலகம் அருகே ஒரு பெண் பிரசவ வலியில் துடித்துள்ளார். உடனடியாக சி.பி.ஐ கட்சியின் தோழர் பழனிச்சாமி ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார்.
ஆனால், அது வருவதற்கு நேரம் எடுக்கும் என்பதால், எனக்கு போன் செய்து உடனடியாக வரச்சொன்னார். தற்போதைய சூழலில் எந்த மருத்துவமனைக்குப் போக வேண்டுமென்பதை எல்லாம் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துவிட்டேன். கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்வதுதான் திட்டம். துணைக்கு என் மகள் ஜீவாவையும் வரச் சொல்லிவிட்டேன்.
ஆனால், நாங்கள் அங்கு போகும்போது அந்தப் பெண் மிகவும் சோர்வாக இருந்தார். வீட்டிலிருந்து கிளம்பியபோதே ரத்தக் கசிவு ஆகியிருக்கும் போல. நான் பார்த்தபோது, ரத்தத்துடன் பனிக்குட நீரும் கலந்து வந்திருந்தது. உதவிக்காக மக்களை அழைத்தேன். ரத்தத்தைப் பார்த்த பதற்றத்தில் இருந்ததால், யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்களை நம்பி தாமதிக்கக் கூடாது என்பதற்காக நானே களத்தில் இறங்கினேன்.
ஆட்டோ சந்திரன் பிரசவம்
ஆட்டோ சந்திரன் பிரசவம்
முதலில் அந்தப் பெண் தடுத்தார். முகத்தைப் பார்த்தபோது, வட இந்தியப் பெண் போல தெரிந்தது. இந்தியில் பேசினேன். பிறகு தடுக்கவில்லை. குழந்தையின் தலை வெளியே தெரிந்தது. நான்தான் குழந்தையை வெளியில் எடுத்தேன். அங்கேயே பிரசவம் ஆகிவிட்டது.
குழந்தையின் இயக்கத்துக்காக, கால்களைப் பிடித்து தலைகீழாகத் தொங்கவிட்டு, முதுகைத் தட்டினேன். குழந்தையின் அழுகைக் குரல் கேட்டது. அது அழகான ஆண் குழந்தை. அதற்குள் ஆம்புலன்ஸ் மூலம் டாக்டரே சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார். அவர்தான் தொப்புள் கொடியை அறுத்தார். தாய் மற்றும் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டோம். அந்தப் பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
உடன் கணவர் மட்டும்தான் இருந்தார். வேறு பெரியவர்கள் யாரும் இல்லை. தகர ஷீட் அமைத்து அதில் தங்கியிருந்து, கிடைக்கின்ற கூலி வேலைகளுக்குச் சென்று வந்துள்ளனர். இப்போது தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். நமது மக்கள் ரத்தத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.
‘எப்படி நீ மட்டும் தைரியமாக இதைச் செய்தாய்?’ என்று பலர் கேட்டனர். ‘யாரோ ஒருவர் என்றுதானே எல்லோரும் வேடிக்கை பார்த்தீர்கள். நம் வீட்டில் யாராவது ஒருவருக்கு இப்படி என்றால் வேடிக்கை பார்ப்போமா?. எல்லோரையும் அப்படித்தான் பார்க்க வேண்டும்’ என்றேன். அதேபோல, பல தாய்மார்களிடம் கேட்டதற்கு, ‘பிரசவத்தைப் பற்றி எதுவும் தெரியாது’ என்கின்றனர். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் உணர்ந்தது. முன்பு எல்லாம் வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர். தற்போது, பிரசவம் என்றால் அது மருத்துவமனை சம்பந்தப்பட்ட விஷயம் என்ற மனப்பான்மை மக்கள் மனதில் உருவாக்கிவிட்டனர். இது ஆரோக்கியமான ஒன்றல்ல” என்றார் அழுத்தமாக.
இந்தச் சம்பவம் குறித்து ஆட்டோ சந்திரனின் மகள், ஜீவா சந்திரகுமார் தனது முகநூல் பக்கத்தில், “சிறு வயதில் இருந்தே எனது தந்தை பல விஷயங்களைக் கற்றுத் தருவதுடன் புதிது புதிதான அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார். இப்போது மற்றொரு புதிய அனுபவம் கிடைத்துள்ளது” என்று பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.