காஞ்சிபுரத்தில் உயிருள்ள பாம்பை வைத்து வித்தை காட்டிய பெண் சாமியாரை வனத்துறையினர் கைது?
காஞ்சிபுரம் அருகே உயிருள்ள பாம்பை வைத்து வித்தை காட்டியதாக பெண் சாமியாரை வனத்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்துள்ள வாலாஜாபாத்தில் ஸ்ரீ வட பத்ரகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை கபிலா என்பவர் நிர்வகித்து வருகிறார். 1999 ஆம் ஆண்டில் சிறு குடிசையில் துவங்கப்பட்ட கோயில் தற்பொழுது பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது. இக்கோயிலை நிர்வகித்து வரும் கபிலா செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களிலும் அருள்வாக்கு சொல்லி வருகிறார்.
கடந்த டிசம்பர் 7ஆம் தேதி வட பத்ரகாளி அம்மன் பெயரில் உள்ள ஒரு யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் உயிருள்ள ஒரு நாகப்பாம்புக்கு தோஷ நிவர்த்தி பூஜை என்று குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கபிலா அம்மன் வேடமிட்டு உயிருள்ள நல்ல பாம்பை தன் கழுத்தில் போட்டுக்கொண்டு அங்கிருந்த மக்களுக்கு அருள் வாக்கு வழங்குகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை காட்சி பொருளாக பயன்படுத்திய காரணங்களுக்காக கபிலாவை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்புகளை வீடுகளில் வளர்ப்பது, அதை வைத்து வித்தை காட்டுவது போன்றவை சட்டப்படி குற்றச் செயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.