கோவில்பட்டி ராஜீவ்நகரில் முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து வருவாய்துறை, காவல்துறை தீவிர கண்கானிப்பு? முழுவிவரம்-விண்மீன் நியூஸ்
வருவாய் துறை, காவல் துறை கண்காணிப்பில் கோவில்பட்டி ராஜீவ் நகர்
கோவில்பட்டியையடுத்த பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகரில் முதியவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அப்பகுதியில் சுமார் 500 மீ சுற்றளவில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு, வருவாய் துறை, காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கோவில்பட்டியையடுத்த பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகரைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்ததையடுத்து, சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர், ஊரக உள்ளாட்சித் துறையினர் உள்ளிட்டோர் அப்பகுதியில் முகாமிட்டனர்.
பின்னர் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, முதியவர் வீட்டை சுற்றிலும் சுமார் 500 மீ தூரத்திற்கு தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டது. அப்பகுதிக்குள் எவரும் நுழையவும், வெளியில் செல்லவும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவில்பட்டி சுகாதாரப் பணி துணை இயக்குநர் அனிதா தலைமையில் அங்கு மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
மேலும், மருத்துவர் உமாசெல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை முதியவரின் உறவினர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள், அக்கம்பக்கத்தினர், நெருக்கமானவர்கள் என 52 பேரின் சளி மாதிரிகளை எடுத்து மருத்துவக் குழுவினர் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், தடுப்புக் கம்புகள் அமைக்கப்பட்ட பகுதியில் குடியிருப்போருக்கு தேவையான அத்தியவாசியப் பொருள்களை வாங்கிக் கொடுப்பதற்கு 15 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அப்பகுதியில் குடியிருப்போருக்கு அடிப்படை தேவையான பொருள்களை வாங்கிக் கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக் குழுவினர் 500 மீ சுற்றுப்பகுதியில் உள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று பிற மாநிலம், மாவட்டங்களில் இருந்து யாரேனும் வந்துள்ளார்களா, வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதேனும் உடல்நலம் குறைவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை கேட்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மாணிக்கவாசகம் அப்பகுதியில் முகாமிட்டு அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் பிளீச்சிங் பவுடர் தூவும் பணிகளுக்கு ஏற்பாடு செய்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் உத்தரவின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையிலான வருவாய் துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.