400 பவுன் தங்கம் சார்.. கவிதாவின் களவாணித்தனம்.. தூக்கம் தொலைத்த தூத்துக்குடி
தூத்துக்குடி: சதுரங்க வேட்டை படத்தில் காந்தி பாபுவாக வரும் நட்டி. மக்களின் பேராசையை வைத்தே, பலே மோசடிகளை செய்வார். அதேபோன்று தூத்துக்குடியில் லேடி காந்தி பாபு, தனது கூட்டாளியுடன் சேர்ந்து 400 பவுன் நகை மோசடி செய்தள்ளார். 10 பவுன் கொடுத்தால், ஒரு மாதத்தில் ஒரு பவுன் இலவசமாக தருவதாக கவிதா அரங்கேற்றிய 400 பவுன் நகை மோசடி தூத்துக்குடி மாவட்டத்தையே திகைக்க வைத்துள்ளது.
அன்றாட வாழ்வில் மோசடி மூலம் மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என்பதையும், மக்களின் பேராசை எப்படி அந்த மோசடிக்குள் மக்களை விழ வைக்கிறது என்பதையும் சதுரங்கவேட்டை படத்தில் இயக்குனர் ஹெச் வினோத் காட்டியிருப்பார் . மண்ணுள்ளிப் பாம்பு வியாபாரம், மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் பிசினஸ் ,பாதி விலையில் நகை என மக்களை ஏமாற்றும் கேரக்டரில் நடிகர் நட்டி பக்காவாக நடித்திருப்பார். அப்படி ஒரு மோசடியை தூத்துக்குடி கவிதா அரங்கேற்றி உள்ளார். தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியார்புரத்தை சேர்ந்த அந்தோணிசாமி. இவருடைய மகன் ராஜரீகம் (வயது 54). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடைய மனைவி சுப்புலட்சுமி என்ற கவிதா (31) என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். கவிதா ராஜரீகத்திடம் சிவத்தையாபுரம் பகுதியில் ஒரு தனியார் கிளப்பில் நிர்வாகியாக இருக்கிறேன், செழிய நங்கை என்ற பெயரில் மகளிர் குழுவை நிர்வகித்து வருகிறேன். எனக்கு அரசியலில் பல பிரமுகர்களையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் தெரியும் என்று கூறியுள்ளார். ராஜரீகத்தை நம்ப வைக்கக சில தில்லாலங்கடி வேலைகளையும் கவிதா செய்துள்ளார்.
மேலும் கவிதா, தான் நிர்வாகியாக உள்ள கிளப்புக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரவிருப்பதாகவும், அதற்கு கிளப் வங்கிக்கணக்கில் அதிக அளவில் தங்க நகைகள் மற்றும் டெபாசிட் தொகைகள் இருந்தால்தான் நிதி வரும் என்றும், செழிய நங்கை குழுவுக்கு நிதி அளித்தால் தூத்துக்குடி விமான நிலையம் அருகில் வீட்டுமனை தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். மேலும் 10 பவுன் தங்க நகைகள் கொடுத்தால் 30 நாட்களுக்குள் ஒரு பவுன் கூடுதலாக தருவதாகவும், ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் 30 நாட்களுக்குள் ரூ.10 ஆயிரம் கூடுதலாக தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதனை நம்பிய ராஜரீகம் 13½ பவுன் தங்க நகைகளை சுப்புலட்சுமியிடம் கொடுத்து உள்ளார். அதன்பின்பு நகைகளை 30 நாட்களுக்குள் திருப்பி தருவதாக சொன்ன சுப்புலட்சுமி 3 மாதங்களாகியும் திருப்பி தராமல் ராஜரீகத்தை ஏமாற்றி விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜரீகம் உடனடியாக அவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கவிதா முத்தையாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலரை ஏமாற்றி சுமார் 400 பவுன் தங்க நகைகளையும், ரூ.50 லட்சத்து 68 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் மோசடியாக வாங்கியது உறுதியானது.
இந்த நகைகளை தனியார் நிதிநிறுவனத்தின் மேலாளரான தூத்துக்குடி அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் வேலவன் (38) என்பவர் மூலம் அடகு வைத்து பணம் பெற்று ஜாலியாக வாழ்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார், நகை, பணம் மோசடி செய்ததாக சுப்புலட்சுமி, வேலவன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.