கும்பகோணம் இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்த வைத்தியர் வீட்டில் எலும்பு துண்டுகள்?, இளைஞரை துண்டு துண்டாக வெட்டி, சமைத்து சாப்பிட்டதாக கூறப்படும் நாட்டு வைத்தியர் – அதிர்ச்சி பின்னணி!
கும்பகோணம் அருகே இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்தவைத்தியர் வீட்டில் மாவட்ட எஸ்.பி. நேற்று ஆய்வு மேற்கொண்டார். வீட்டைச் சுற்றி பள்ளம் தோண்டியதில், 8 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம்மணல்மேட்டைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் அசோக்ராஜன்(27). சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், தீபாவளிக்கு ஊருக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னை திரும்பியபோது காணாமல் போனார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சோழபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், அசோக்ராஜனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, அதே பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தியிடம்(47) போலீஸார் விசாரித்தனர்.
அப்போது, அசோக்ராஜனை கேசவமூர்த்தி கொலைசெய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி,வீட்டின் பின்புறம் புதைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி கேசவமூர்த்தியை போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நவ.19-ம் தேதிமுதல் 21-ம் தேதி வரை கேசவமூர்த்தி வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டு, வீட்டுக்குள் இருந்து சில எலும்புகள் மற்றும் வெள்ளிச் சங்கிலி ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து, கேசவமூர்த்தி வீட்டில் தஞ்சாவூர் எஸ்.பி. ஆசிஷ் ராவத் மற்றும் வருவாய்த் துறை, தடய அறிவியல் துறையினர், 20-க்கும் மேற்பட்ட போலீஸார்நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கேசவமூர்த்தியின் வீட்டைச் சுற்றிலும் பொக்லைன் உதவியுடன் பள்ளம் தோண்டி, சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, வீட்டின் முன்புறம் தோண்டப்பட்ட பள்ளத்தில் 8 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தியை போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, அதிர்ச்சியான தகவல்களும், ஆதாரங்களும் கிடைத்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சோழபுரத்தை சேர்ந்த இளைஞர் அனாஸ் என்பவர் காணாமல்போனது குறித்தும் கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரித்தனர். அவரையும் கொலை செய்ததாக, கேசவமூர்த்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஒவ்வொருவரையும் கொலை செய்து, அவர்களை துண்டு துண்டாக வெட்டி புதைப்பதற்கு முன்பு மனித உறுப்புகளை சமைத்து ருசி பார்த்ததாக கூறப்படுகிறது. பலருக்கு ஆண்மை மாத்திரைகளையும், இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கேசவமூர்த்தி மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மீண்டும் கேசவமூர்த்தி வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டின் கொல்லைப்புற பகுதியில் பொக்கலின் இயந்திரத்தை கொண்டு தோண்டினர். அப்போது கிடைத்த தடயங்களை கொண்டு நாட்டு வைத்தியரின் கொடூர கொலைகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னிடம் வைத்தியம் பார்த்த இளைஞர்களை கொடூரமாக கொன்று, மனித உறுப்புகளை சாப்பிட்டதாக கூறப்படும் வைத்தியரின் செயல்பாடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.