கோவில்பட்டி புதியபேருந்து நிலையத்தில் தங்கசெயின், மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த துப்புறவு மேற்பார்வையாளர் , சுகாதார ஆய்வாளர்?
கேட்பாரற்று கிடந்த தங்கச்செயின், மோதிரம் உரியவரிடம் ஒப்படைப்பு
கோவில்பட்டி புதிய பேருந்து நிலைய தற்காலிக தினசரி சந்தை முன்புறம் கேட்பாரற்று கிடந்த தங்கச்செயின், மோதிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக தினசரி சந்தை 30ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 125 கடைகள் உள்ளது. நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கனி பேருந்து நிலையத்தின் முன்புறம் நின்று கொண்டு, இருசக்கர வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்த வேண்டும். சந்தைக்குள் வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி கொண்டு கையை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஒலிபெருக்கி மூலம் செவ்வாய்க்கிழமை சொல்லிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, தினசரி சந்தையின் நுழைவுவாயில் அருகே கேட்பாரற்று கிடந்த மோதிரத்துடன் கூடிய சுமார் 2 பவுன் தங்கச்செயின் கிடப்பதைக் கண்ட அவர், அதை எடுத்து ஒலிபெருக்கி மூலம் அறிவித்தாராம். மேலும், அங்கு பணியில் இருந்த சுகாதார ஆய்வாளர் முருகனிடம் ஒப்படைத்தாராம்.
இந்நிலையில், தினசரி சந்தையில் காய்கனி கடை வைத்திருக்கும் அமிர்தராஜ் உரிய ஆதாரத்துடன் தங்கச்செயின் மற்றும் மோதிரம் என்னுடையது என விளக்கமளித்தாராம். அதையடுத்து, சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில், சுகாதார மேற்பார்வையாளர் கனி தங்கச்செயின் மற்றும் மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.
சுகாதார மேற்பார்வையாளரின் சேவையை நகராட்சி ஆணையர் ராஜாராம், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் நகராட்சி ஊழியர்கள் பாராட்டினர்.