எட்டு வயதுக்கு மேற்ப்பட்ட குழந்தைகளை எப்படி சிறந்த முடிவெடுக்கும் நபராக வளர்ப்பது?
எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை எப்படி சிறந்த முடிவெடுக்கும் நபராக வளர்ப்பது?
ரொம்ப ரொம்ப சிம்பிளாக ஒன்று சொல்கிறேன்.முயற்சி செய்து பாருங்கள்.
காய்கறி கடைக்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள். அங்கே பல்லாரி, சின்ன உள்ளி, பூண்டு, தேங்காய், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை அவர்களையே தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்.
அனைத்தையும் எடுக்கச் சொன்னால் கடுப்பாகி விடுவார்கள். ”தக்காளி ஒரு கிலோ இந்த ட்ரேல பொறக்கி வை. நான் அங்க கேரட் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.
இப்போது அவர்களும் தக்காளியும் மட்டுமே அங்கிருப்பார்கள். மனிதனின் அடிப்படைப் பண்பளவில் யாரும் மோசமானவற்றை விரும்ப மாட்டார்கள். ஆகையால் அவர்களால் முடிந்தவரை நல்ல தக்காளியைத் தேர்ந்தெடுப்பார்கள்.
எப்படி நல்ல தக்காளியைத் தேர்ந்தெடுப்பது என்ற Check list ஐ வேக வேகமாக அவர்கள் ஆழ்மனம் தயாரிக்கும்.
- பார்க்க சிகப்பான தக்காளி
- அடிபடாத சிதையாத தக்காளி
- அழுகாத தக்காளி
என்றொரு குறுகிய செக் லிஸ்ட் தர்க்கமாக அவர்கள் மனதில் தோன்றும். எப்போது அப்படித் தோன்றும் “நீயே முடிவெடு” என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் தான் அப்படி தோன்றும்.
இப்போது தனக்குத் தோன்றிய செக் லிஸ்ட் படி தன்னால் தேர்ந்தெடுக்க முடியுமா என்றொரு சந்தேகம் அவர்களுக்கு வரும்.
- தன்னை எல்லோரும் பார்க்கிறார்கள் என்ற வெட்கம்
- சரியில்லை என்றால் குடும்பம் விமர்சனம் செய்யும் கிண்டல் செய்யும் என்ற தயக்கம்
இந்த இரண்டும் அவர்களை நல்ல தக்காளி எடுக்கும் செக் லிஸ்டின் படி வேலையைச் செய்ய விடாமல் செய்யும்.
பிறர் பார்க்கிறார்களே என்ற வெட்கத்தையும், நீ எடுப்பது தான் தக்காளி உன்னை ஒன்றும் சொல்ல மாட்டோம் என்ற நம்பிக்கையையும் மறைமுகமாக அவர்களுக்குச் சொல்லுங்கள்.
வீட்டுக்கு வந்ததும் “தக்காளி வாங்கிட்டு வந்திருக்கா/ ன் பாரு தக்காளி” என்று யாரும் கிண்டல் செய்யாதீர்கள்.
இப்படி இரண்டு மூன்று முறை விட்டால் அவர்கள் சிறந்த தக்காளியை தேர்ந்தெடுத்து வருவார்கள்.
அதன் பிறகு தக்காளி செக் லிஸ்டில் உங்கள் அனுபவத்தில் உள்ள பாயிண்டுகளை குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.
- பார்க்க சிகப்பான தக்காளி
- அடிபடாத சிதையாத தக்காளி
- அழுகாத தக்காளி
மட்டும் போதாது…
- ஊமைக் குத்து வாங்காத தக்காளி
- இரண்டு நாள் கழித்து பழுக்கும் தக்காளி 30 சதவிகிதம் இருக்க வேண்டும்.
- மீடியம் சைஸ் தக்காளி இருந்தால் நலம். அல்லது ஒரு தக்காளியை பாதி வெட்டிப் பாதியை பாதுகாப்பது கடினம்.
போன்றவற்றை ரிலாக்ஸாக டிஸ்கஸ் செய்யலாம்.
இதில் நீங்கள் இரண்டு கிலோ தக்காளியை இழக்கலாம். ஆனால் முடிவெடுத்தல் என்ற மாபெரும் ஆளுமைப் பண்பை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்கள்.
தேங்காயும் அப்படித் தான்.
பலர் இன்னும் தேங்காய் செலக்ட் செய்வது கடினமான காரியம் என்று நினைப்பார்கள்.
சிறாரை சுதந்திரமாக தேங்காய் செலக்ட் செய்யச் சொல்லி, வீட்டுக்கு வந்து அதை உடைத்துக் காட்டுவதும் கூட சிறந்த முடிவெடுக்கும் பண்பை வளர்க்கும் காரியம் தான்.
புறரீதியான லேசான நெருக்கடி வரும் போது தான் முடிவெடுக்க மூளை வேலை செய்யும்.
அதற்குத் தேவை சுதந்திரம், முடிவெடுக்கும் சுதந்திரத்தை கொடுத்தால், ஊக்கப்படுத்தினால் சிறார்கள் பிற்காலத்தில் அசத்துவார்கள்.
உலகின் எந்த சிஸ்டத்துக்குப் போனாலும் சட்டென்று அதைப் படித்து, அதன் தன்மைகளைப் புரிந்து கொண்டு முடிவெடுப்பார்கள்.
அவர்கள் வாழ்க்கை எளிதாய் இருக்கும்.
ஆகவே நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால் உங்கள் குழந்தைகளை சுயமாக பல்லாரி, தக்காளி எடுக்க விடுங்கள்.