கோவில்பட்டியில் நடந்து சென்ற மேலும் இருவருக்கு அரிவாள் வெட்டு?
கோவில்பட்டி நடந்து சென்ற இருவருக்கு அரிவாள் வெட்டு
கோவில்பட்டி திலகர் நகரில் இன்றுநடந்து சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி டால்துரை பங்களாத் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி மகன் லாரி ஓட்டுநர் மாரியப்பன்(60). இவர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கொம்பையா மகன் கார் ஓட்டுநரும், நிதி நிறுவனம் நடத்தி வருபவருமான மகாராஜா(35) இருவரும் திலகர் நகரில் நோயால் பாதிக்கப்பட்ட சமையல் மாஸ்டரான சங்கரை பார்த்துவிட்டு, திலகர் நகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்களாம்.
அப்போது, மர்ம நபர்கள் சிலர் மகாராஜாவை தாக்க முயன்றார்களாம். அதை தடுத்த மாரியப்பன் மற்றும் மகாராஜாவுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்ததாம். இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மகாராஜா முதலுதவி சிகிச்சைக்குப் பின், மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.