கோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை? அதிமுகவினர் சாலை மறியல்?
கோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை – குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி அதிமுகவினர் சாலைமறியல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்க புரத்தைச் சேர்ந்த ராமையா மகன் பாலமுருகன் (40). கோவில்பட்டி நகராட்சி 5-வது வார்டு அதிமுக பிரதிநிதியாக இருந்தார். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சங்கரலிங்கபுரம் செல்லும் வழியில் உள்ள கோயில் முன்பு அவரை வழி மறித்த மர்ம நபர்கள் சிலர் திடீரென கரும்பை கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் நிலை குலைந்து பாலமுருகன் கீழே விழுந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் பாலமுருகனின் உடலில் கால் இடுப்பு பகுதி மற்றும் கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ், மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பாலமுருகனின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அந்தக் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். சம்பவ இடத்தினை மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தொலைவிலுள்ள இலுப்பையூரணி விலக்கு வரை மோப்பநாய் ஓடி நின்றது. இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த பாலமுருகனுக்கு மல்லிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பாலமுருகன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்காக தீவிரமாக வேலை பார்த்து வந்தார். உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள காளியம்மன் திருக்கோவில் விழாவில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியில் பெண்களை கிண்டல் செய்தவர்களை பாலமுருகன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா ? பாலமுருகன் முழுநேர அரசியல் ஈடுபட்டு வருவது மட்டுமின்றி, அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதால் மக்களிடையே நல்ல பெயர் இருந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் இவர் அந்த 5 வது வார்டில் போட்டியிட்டால் பாலமுருகன் வெற்றி பெற்று விடுவார் என்ற நிலையில் அவருடைய அரசியல் எதிரிகள் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். . இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி அதிமுகவினர் மற்றும் பாலமுருகன் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்கள் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டு உடலை வாங்கி சென்றனர். இதையெடுத்து பாலமுருகன் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.