ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய மத்தியரசு முடிவு? பெரும் இழப்பைச் சந்தித்து வருவதால் நடவடிக்கை?
புதுடில்லி:
பெரும் இழப்பை சந்தித்து வரும், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை விற்பனை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் இந்தியா நிறுவனம், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தை மறுசீரமைக்க, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்நிறுவனத்தில், மத்திய அரசின் பங்கு மூலதனத்தை குறைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. எனினும், இத்திட்டத்திற்கு, போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
இந்நிலையில், மத்தியில், பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் அரசு அமைந்ததும், ஏர் இந்தியா நிறுவன பங்கு விற்பனை தொடர்பாக அமைக்கப்பட்ட, குழு சீரமைக்கப்பட்டது. இக்குழு, ஏர் இந்தியாவில், மத்திய அரசின், 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பங்கு விற்பனைக்கான பணிகள் விரைவில் துவங்கப்படும். விமான போக்குவரத்து துறையை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடன் பிரச்னையால், முடங்கிய, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின், விமான சேவை உரிமங்கள், பிற விமான நிறுவனங்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளன. அடுத்த, ஐந்து ஆண்டுகளில், விமான நிலைய மேம்பாடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள, இந்திய விமான போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.