உட்கார்ந்த இடத்திலிருந்தே மாஸ் காட்டும் சோனியா காந்தி.. போன் போட்டு ஆதரவு கேட்ட உத்தவ் தாக்ரே.
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் சிக்கல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில் முடிவடைந்த மகாராஷ்டிர மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரசையும் அதன் தலைமையையும் கடுமையாக எதிர்த்து வந்த கட்சி சிவசேனா. ஆனால், இப்போது ஆட்சியை பிடிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவை என்ற சூழ்நிலை எழுந்தவுடன், உத்தவ் தாக்கரே தானாக முன்வந்து சோனியா காந்திக்கு தொலைபேசியில் அழைத்து ஆதரவு கோரியுள்ளார்.
மகாராஷ்டிராவில், பாஜக ஆட்சி அமைக்க முடியாது என கைவிரித்து விட்ட நிலையில், அடுத்த பெரிய கட்சியான சிவசேனாவை, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் உத்தவ் தாக்கரே உள்ளார். எனவே தான், அரசியல் பகைமைகளை மறந்து விட்டு, சோனியா காந்தியை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார் உத்தவ் தாக்கரே.
மது பார், ஸ்பா.. ரூ.1.20 லட்சம் கட்டண வில்லா.. மகாராஷ்டிரா காங். எம்எல்ஏக்கள் வாழ்றாங்கப்பா
முன்னதாக, மும்பையில் ஒரு ரகசிய இடத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்-உத்தவ் தாக்கரே சந்திப்பு நடந்தது. அப்போது சோனியாவிடம் நீங்களே நேரடியாக பேசினால் காங்கிரஸ் இந்த கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று சரத் பவார் தெரிவித்ததாகவும், அதை அடுத்துதான் உத்தவ் தாக்கரே, சோனியாவுக்கு போன் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கூட்டணியில், தேசியவாத காங்கிரஸ் கட்சி இருப்பதால், காங்கிரஸ் என்ன மாதிரி முடிவெடுக்கிறதோ, அதை வைத்துதான் நாங்கள் முடிவு எடுப்போம் என்று சரத் பவார், கட்சி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. எனவே சோனியா காந்தி, கிங் மேக்கராக மாறிய நிலையில், உத்தவ் தாக்கரே தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.