காயிலான்கடை? உடையும் சிறுதொழில் அஸ்திவாரம்
உடையும் சிறுதொழில் அஸ்திவாரம்
ரொம்ப நாள் ஆச்சுன்னு நண்பனைப் பார்க்க அவன் காய்லாங்கடைக்குப் போயிருந்தேன். கண்ணாடி பாட்டில் எல்லாம் கடைக்கு வெளியே குப்பை மாதிரி போட்டு வச்சிருந்தான்.
உள்ள போய் பாத்தா வேலை செய்றவங்க 2,3 பேர் தான் இருந்தாங்க.
டேய் கதிர் எப்படிடா இருக்கன்னு கேட்டேன்.
“வாடா உட்காரு. ஏதோ இருக்கேன்.”னு சொன்னான்.
ஏண்டா எல்லாம் குப்ப மாதிரி போட்டு வச்சிருக்கே?
“குப்பையைக் குப்ப மாதிரி போட்டு வைக்காமல் வேற எப்படிப் போட்டு வைக்கிறது?”ன்னு கடுப்பாக் கேட்டான்.
என்னடா ஆச்சுனு கேட்டு முடிக்கிறதுக்கு முன்னாலேயே, “சமாளிக்க முடியலடா வியாபாரம் இறங்கிப் போச்சு.”
“பாட்டில் எல்லாம் முன்னாடி கோணியில அடுக்கி வச்சுக் கட்டி பத்திரப்படுத்தி வைப்போம். இப்போ எல்லாம் வெளிய போட்டாக் கூட யாரும் தொடுறதில்லை.”
“°பாட்டில் விலை குறஞ்சு போயிடுச்சான்னு கேட்டேன்.
“விலை குறையறதா? நீ வேற… எடுக்குறதுக்கே ஆளில்ல. ரொட்டேஷன் நின்னு போச்சு. இரும்பு கிலோ 40 ரூபா வரை போயிட்டு இருந்தது 16 ரூபா தான் போகுது. அலுமினியம் என்ன விலைனே தெரியல. யாருமே கேட்கிறது இல்லை. காப்பரும் பாதிக்கு மேல குறைஞ்சு போச்சு.”
“குட்டியானை, தோஸ்த்து கூட ஒரு மாசமா சும்மா நிக்க வச்சு ட்யூ கட்டுறேன். வேலைக்கு ஆகிறது மாதிரி தெரியல, ஏதாவது வேலை இருந்தா சொல்லு.”
சொந்தமா தொழில் செஞ்சுட்டு இருந்தவன் வேலைக்குப் போறேன்னு சொல்ற…!கொஞ்ச நாள்ல சரியாயிடும் வெயிட் பண்ணு.
“அப்படி எல்லாம் சரியாகிடாது. நாங்க கொடுக்குற ஸ்கிராப் திரும்பவும் சுத்தமான இரும்பு காப்பர் அலுமினியம் ஆக கம்பெனிகளுக்குப் போகும். கார், பைக், மெஷின்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்கள் உற்பத்திக்கும் தேவைப்படும். இப்ப தான் எல்லாம் முடங்கிப் டிமாண்ட் இல்லாம போச்சே. எல்லாம் சரியாயிடும்னு உட்கார்ந்துட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. இப்பவே குழந்தைகளுக்கு ரெண்டு மாசமா பீஸ் கட்டல. இரண்டு வண்டியையும் வித்திடலாம்னு பார்த்தா அதக் கூட வாங்க ஆளில்லை.”
மச்சி ஸ்க்ராப் எடுக்குறவங்க யாராவது இருக்காங்களான்னு விசாரிச்சு சொல்லவா?
“எடுக்குறவங்க முன்ன காசு குடுத்து பொருள் எடுப்பாங்க. இப்ப எடுத்துட்டுப் போனாலும் 5 மாசம் கழிச்சு தான் காசு கொடுக்குறாங்க. அதுக்குள்ள நான் ஒரு வழி ஆயிடுவேன்.”
“கோடிக்கணக்கில் பணம் கடன் வாங்குனவங்களுக்கு கடனைத் தள்ளுபடி பண்ணிட்டாங்க. வரிச்சலுகை குடுக்குறாங்க. அவங்க தொழில் செஞ்சா தான் வேலைவாய்ப்பு வரும்னு சொல்றாங்க. என்ன நம்பி முப்பது பேர் இங்க வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. இப்ப 7 பேரு தான் இருக்காங்க. சம்பளம் கொடுக்க முடியாததால் அனுப்ப வேணடியதாச்சி. இதப் பத்தி யாரும் பேச மாட்டாங்க…” அப்படின்னு குரல் தழுதழுக்க சொன்னான்.