டெங்குகாய்ச்சலுக்கு ஜோலார்பேட்டை சிறுமி பலி
டெங்கு காய்ச்சலுக்கு, ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சிறுமி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர். கட்டட மேஸ்திரி. இவரின் நான்கரை வயது மகள் அனுஷியாவுக்கு கடந்த நான்கு நாள்களாகக் காய்ச்சல் நெருப்பாய் கொதித்தது. அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பெற்றோர் தூக்கிச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.
டெங்கு கொசு
நேற்று முன்தினம் காலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுஷியா அனுமதிக்கப்பட்டாள். காய்ச்சல் தீவிரமடைந்து அனுஷியாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். ரத்த மாதிரியில் டெங்கு வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பிலிருந்த அனுஷியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அனுஷியாவைப் பறிகொடுத்த அதிர்ச்சியிலிருந்து உறவினர்கள் மீளவில்லை. உடலைக் கட்டித்தழுவி முத்தம் கொடுத்து கதறி அழுதனர். இதுபற்றி தலைமை மருத்துவர்கள் கூறுகையில், “ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அனுஷியாவுக்கு மலத்துடன் ரத்தம் வெளியேறியது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை
காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை. டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் எக்காரணம் கொண்டும் ஊசி போட்டுக்கொள்ள வேண்டாம். அறியாமையால் பொதுமக்கள் ஊசி போட வற்புறுத்துகிறார்கள். அரசு மருத்துவமனையைப் புறக்கணித்து தனியார் மருத்துவர்களிடம் செல்கிறார்கள். அவர்கள் ஊசி போடுவதால் தட்டணுக்கள் சிதைந்து ரத்தக் கசிவு ஏற்பட்டுக் காய்ச்சல் தீவிரமடைகிறது. இதுதான் உயிரிழப்புக்கும் வழி வகுக்கிறது.
பின்னரே, அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். கஞ்சி, மோர், பழச்சாறு போன்ற நீராகாரத்தைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டாலே போதுமானது. காய்ச்சல் குறைந்து வெகு சீக்கிரமாக உடல்நிலை சீராகும். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் சுமார் 30 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில், சில குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
டெங்கு
எனினும், தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதால் குழந்தைகள் நலமுடன் இருக்கிறார்கள். சீரான ரத்த ஓட்டம், நாடித் துடிப்பு, குழந்தைகள் எந்த அளவுக்குப் பேசுகின்றன என்பதைக் கவனித்தாலே போதும். பொதுமக்கள் பயப்படவே வேண்டாம். நீராகாரத்தைக் கொடுப்பதால் காய்ச்சல் குறைந்து சிறுநீருடன் சேர்ந்து வைரஸும் வெளியேறும்’’ என்கின்றனர் தெளிவாக.