பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி குளறுபடியால் தீபாவளி களையிழந்தது சிவசேனா கட்சி குற்றச்சாட்டு
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குளறுபடி போன்ற காரணங்களால் தீபாவளிப் பண்டிகை களையிழந்துக் காணப்பட்டதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேட்டில் வெளியான கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பொருளாதார மந்தநிலை நாடு முழுவதும் காணப்படுவதாக சிவசேனா சுட்டிக் காட்டியுள்ளது.
பட்டாசுகள் வாங்குவதற்கு காணப்படும் உற்சாகம் கடைகளில் இல்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் மந்தம் அடைந்ததால் சந்தையில் 40% வரை விற்பனை குறைந்து காணப்பட்டதாக சிவசேனா கூறியுள்ளது.
மராட்டியத் தேர்தல் களம் கூட உற்சாகமின்றி இருந்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது போன்று அனைத்திலும் உற்சாகம் குறைந்து அமைதி நிலவி வருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி தவறான கொள்கை முடிவு எடுத்ததே பிரச்சனைக்குக் காரணம் என்பதை சிவசேனா மறைமுகமாகக் கூறியுள்ளது. மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாரதிய ஜனதாவை விமர்சித்து சிவசேனா கட்சி கட்டுரை வெளியிட்டு இருப்பது அரசியல் அரங்குகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.