ஒருகோடி ரூபாயில் உலகத்தரம் வாய்ந்த ,கீழடி அருங்காட்சியகம், அமைக்க முடியுமா?
ஒரு கோடி ரூபாயில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க முடியுமா?யானைப் பசிக்கு சோளப்பொரி போதுமா?
ஏற்கெனவே கணிக்கப்பட்டிருப்பதைவிட தமிழர்களின் நாகரிகம் பழைமையானது என்பதை, கீழடி நான்காம்கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் பொருள்கள் பறைசாற்றுகின்றன. ஆனால், இங்கு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. “யானைப் பசிக்கு சோளப்பொரி போல, ஒரு கோடி ரூபாயில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க முடியுமா?’’ என்று சீறுகிறார்கள் மதுரை மக்கள்!
கீழடியில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சட்டரீதியாகப் போராடிவருபவர் வழக்கறிஞர் கனிமொழி மதி. அவரிடம் பேசினோம். ‘‘ஆரம்பத்திலிருந்தே கீழடிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தொல்லியல் துறைக்கு 27,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக ‘ஆர்க்கியாலஜிஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா’ தன் இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் அகழாய்வுப் பணிக்கு மட்டும் சுமார் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கீழடிக்கு, சொல்லிக்கொள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அப்படியான சூழலில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு மனமுவந்து நிதி ஒதுக்குமா என்பது சந்தேகமே. மத்திய அரசுதான் தமிழகத்துக்கு பாரபட்சம் காட்டுகிறது என்றால், தமிழக அரசு அதற்குமேல் மோசமாக இருக்கிறது. வெறும் ஒரு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறார்கள்.
அந்தப் பணத்தில் என்ன செய்ய முடியும்? அமையவிருக்கும் அருங்காட்சியகம், வெறும் காட்சிக்கூடமாக இருக்கக் கூடாது. அங்கு கீழடி பற்றி அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட நூலகமும் அமைக்க வேண்டும். தமிழர்களின் கலாசாரமும் பண்பாடும் எவ்வளவு தொன்மையானவை என்பதை உலக அரங்கில் நிலைநிறுத்தப்போகிறது கீழடி. அப்படியிருக்கும்போது கீழடி விஷயத்தில் ஒவ்வொன்றுக்கும் அரசிடம் போராட வேண்டியிருப்பது வேதனையாக இருக்கிறது. தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது மட்டுமின்றி, மத்திய அரசிடமிருந்தும் அதிகமான நிதியைப் போராடிப் பெற்றாக வேண்டும்’’ என்றார்.
‘அறியப்படாத மதுரை’ நூலின் ஆசிரியர் ந.பாண்டுரங்கனிடம் பேசினோம். ‘‘மத்திய அரசிடம் கீழடியின் முக்கியத்துவத்தை அழுத்திச் சொல்லி நிதி பெற வேண்டிய தமிழக அரசு, தைரியமற்ற அரசாக இருக்கிறது. தற்போது கீழடி அகழாய்வு முடிவுகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதனாலேயே, தமிழக அரசும் `போனால் போகட்டும்’ என்று ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. இல்லையென்றால், அதுவும் கிடைத்திருக்காது. கீழடி அருங்காட்சியகம் தனித்துவமாக அமைய வேண்டுமானால், குறைந்தது 200 கோடி ரூபாய் வேண்டும். தமிழக அரசு அதற்கான ஏற்பாட்டைச் செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொய்வில்லாமல் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடி ஆய்வு முடிவுகளை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும். கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடுவதில் மத்திய அரசு தலையிடுவதோ… தாமதப்படுத்துவதோ கூடாது” என்றார்.
தொல்லியல் ஆர்வலரான ஜெமினி ரமேஷ், “கீழடி ஆய்வில் பழந்தமிழரின் கட்டடப் பகுதிகள் கிடைத்திருப்பது, சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. அந்தக் கட்டடத்தின் பகுதிகள் 200-லிருந்து 250 மீட்டர் இடைவெளியில் இரண்டு இடங்களில் கிடைத்துள்ளன. கீழடியை முழுமையாகக் கண்டறிய வேண்டும் என்றால், 100 கி.மீ வரை தேவையான இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் முழுமையான நகரத்தைக் கண்டறிய முடியும். அதை வலியுறுத்தும்விதமாக கீழடியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள காளையார் கோவிலை அடுத்த இலந்தக்கரை கிராமத்தில் கீழடியில் கிடைப்பதைப் போன்றே பானைகள், சுடுமண் பொம்மைகள், பாசிகள் கிடைத்து வருகின்றன. அங்கு பாசி, பவளங்கள் தயார்செய்யும் தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றுகள் இருக்கும் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது. எனவே, கீழடி ஆய்வை விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேட்டோம். ‘‘கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ஒரு கோடி ரூபாய் நிச்சயமாகப் போதாதுதான். அருங்காட்சியகத்துக்கு நிதி ஒதுக்கச் சொல்லி மத்திய அரசை வலியுறுத்துவதற்காகத்தான் தற்போது டெல்லி வந்திருக்கிறேன். நிச்சயம் போதுமான நிதி கிடைக்கும்” என்றார்.
எது எதற்கோ கோடிகளைக் கொட்டும் தமிழக அரசு, தமிழர்களின் பெருமையை ஆவணப்படுத்தும் விஷயத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கலாமா?