பாசமலர் படத்துக்கு அனாசின்மாத்திரை வாங்கி சென்ற அத்தைமார்கள்
“ அத்தை “
பாசமலர் படத்துக்குப் போகும் போதே அழுதழுது
தலைவலிக்கும் என்பதால்
அனாசின் மாத்திரை வாங்கி
முந்தானையில் முடிச்சிட்டு தியேட்டருக்குக்
கொண்டு போன அத்தைகளிருந்தார்கள்.
எம்மகளக் கட்டிக்கடா மருமகனே
என்றபடியே அண்ணன் மகன்களைத் தொட்டுக் கொஞ்சி
முத்தமிட்ட அத்தைகளிருந்தார்கள்.
சின்னப் பாத்திரத்தில் கறித்துண்டுகள்
நீந்தும் கோழிக்குழம்பை இடதுகையால் பிடித்து முந்தானைச் சேலையால் மூடிக் கொண்டு வந்து பையனுக்குக் கொடுங்க அண்ணி என்று கொடுத்து விட்டுப் போன
அத்தைகளிருந்தார்கள்.
மருமகன்களின் பிறந்த நாட்களில் அத்தை தரும் சில்லறைக் காசுகளை மறுதலித்தால் கண்கள் நிறைந்த அழுகையாய் மூக்குறிஞ்சியபடி
காசை வாங்கிக்கடா என்று கெஞ்சிய
அத்தைகளிருந்தார்கள்.
குளிக்க மறுத்து ஓடிப்போகும் அண்ணனின் சிறு மகன்களைத் துரத்திப் போய்ப் பிடித்து வந்து சிரிப்புக் காட்டி எண்ணைத் தேய்த்துக் குளிக்க வைத்த
அத்தைகளிருந்தார்கள்.
இடுப்பில் தூக்கிச் சுமந்து போய் திருவிழாவில் மருமகன் அழுவதைக் காணப்பொறாமல் இராட்டினத்தில்
சுற்றும் சுகத்தையும் கொடுத்த
அத்தைகளிருந்தார்கள்.
SSLC முடித்து
பாலிடெக்னிக் சேர்க்க
பணம் குறைந்து கைபிசைந்து நின்ற நேரத்தில் இதை வெச்சுக் காலேஜுல சேர்த்துங்க அண்ணி.
அப்புறமா பார்த்துக்கலாம் என்றபடி எண்ணையிறங்கிய கல்லுக் கம்மலைக்
கழட்டிக் கொடுத்துப் போன அத்தைகளிருந்தார்கள்..
வெட்கத்தில் நெளிந்தபடி
உடைந்த விடலை இருகுரலில் பேசும் மருமகனின் அரும்புமீசைப் பூனைமயிர்களைச்
செல்லமாய்ப் பிடித்து
இழுத்தபடி என் மருமவனே வயசுக்கு வந்திட்டேடா என்று கிண்டலடித்துக்
கூச வைத்த அத்தைகளிருந்தார்கள்.
சகோதரனின் பிள்ளைகளுக்கு பெரியம்மை
வந்த காலத்தில் மாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டு மண்சோறு தின்ற
வெள்ளந்தி அத்தைகளிருந்தார்கள்.
எம் மவனுக்குப் பொண்ணு கொடுக்காமல்
பெறத்திக்குக் கொடுக்கிறியே சண்டாளா
என்று அண்ணனிடம் சண்டையிட்டுப் போன
அத்தைகள் இருந்தார்கள்.
போகட்டும் ரெண்டாம்
மகனுக்காவது பொண்ணைக் கட்டிக் கொடுத்திரணும்
எப்படியாவது சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு
மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டே
மூக்கு நுனியில் கண்ணீர் வடித்தபடி மூத்தவனின்
திருமணத்தில் பாத்திரங்களை விளக்கிக் கொடுத்த அத்தைகளிருந்தார்கள்.
அண்ணன் பாவம்
நொடிஞ்சி கெடக்குது
எனக்கு வீடெல்லாம் வேண்டாம்
அண்ணனுக்கே கொடுத்திருங்க…
ஒங்க மாப்பிள்ளை கிட்டே நான் சொல்லிக்கிறேன் என்று தகப்பனிடம்
அண்ணணுக்காக மன்றாடிய அத்தைகள்
இருந்தார்கள்.
எல்லாந் தொலைந்து
கூட்டுக் குடும்பங்கள் அழிந்து போய்
காங்கிரீட் கூடுகளுக்குள் பிழைத்துக் கிடக்கும் ஒற்றைப்பிள்ளைக்
குடும்பங்களின் அடுத்த தலைமுறைக்கு
வாய்க்கப் போவதேயில்லை….
அத்தைகளின் பாசப் பெருமழை.