மயிலாடுதுறை: வரும் மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக காளியம்மாளை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. அதையடுத்து அவர் கடந்த புதன்கிழமை மாலையில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டார்.
பரப்புரையைத் தொடங்குவதற்கு முன், மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவுத் தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், மயிலாடுதுறை கண்ணாரத் தெரு, பட்டமங்கலத் தெரு, மணிக்கூண்டு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக திறந்த வாகனத்தில் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காளியம்மாள், “தேர்தல் கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதி, பணம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய தேவையோ நெருக்கடியோ நாம் தமிழர் கட்சிக்கு ஏற்படவில்லை. அதனால்தான் எங்கள் கட்சித் தலைமை முன்கூட்டியே வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
சின்னத்தை முடக்கி நாம் தமிழர் கட்சியை முடக்கிவிடலாம் என்று பலர் நினைக்கலாம். ஆனால், நெருக்கடிகளைச் சந்திக்கும்போது எங்களுக்கு இன்னும் வேகமாகப் பயணிக்க வேண்டும் என்னும் உந்துதல் கிடைக்கிறது். மயிலாடுதுறை தொகுதியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவற்றையெல்லாம் தீர்ப்பதற்கான முயற்சிகளை நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.