கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு; காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்: மீனவர்கள் முடிவு
ராமேசுவரம்: கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பது என தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.
எதிர்வரும் 23, 24ஆம் தேதிகளில் கச்சத்தீவில் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கடல் எல்லையைக் கடந்து வந்து மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கைக் கடற்படை கைது செய்வதை தமிழக மீனவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
மேலும், தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமை ஆக்குவதற்கும் மீனவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிப்பதற்கும் மீனவ சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.