விவசாயிகள் போராட்டக் களத்தில் அதிர்ச்சி; விவசாயி ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பு
புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் புதுடெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகள் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே அரியானா மாநிலம், அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையில் காவல்துறையினராலும் தற்காப்புப் படையினராலும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தடுப்புகளை மீற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல் கடந்த 3 நாட்களாக சம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற முதியவருக்கு பிப்ரவரி 16ஆம் தேதி காலை நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஞ்சாப்பின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.