கதைகளின் கதை :
- சு. வெங்கடேசன்
கட்டுரை வாசிப்பை நேசிப்பவர்களுக்கான சிறந்த கட்டுரை நூல்…
12 கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
“காவல் கோட்டம்” நாவலுக்கான தேடலில் கிடைத்தத் தகவல்களை வைத்துத் தொகுத்தப் பெற்ற நூல்….
வளரி :
இது குறித்துப் படங்கள் வாயிலாகவும் புதினங்கள் வாயிலாகவும் நாம் சிலவற்றை அறிந்திருந்தபோதிலும் இவரின் தேடலோ நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
வளரி அழிந்ததற்கான அழிக்கப்பட்டதற்கான காரணத்தை அறியும் போது நம்மையும் அறியாமல் நமது தமிழரின் வீரம் வீறுநடை போடுகிறது.
போக்கிரி :
“போக்கிரித்தனம்” என்று மட்டுமே நாம் அறிந்த போக்கிரிகள் குறித்த புதிய பார்வை பளிச்சிட இக்கட்டுரை உதவுகிறது.
அழிக்கப்பட்ட ஆயுதங்கள் போல.. அழிக்கப்பட்ட இனக்குழு “போக்கிரி” என்று அறியும் போது கண்ணீர் சிந்துவதைத் தவிர்க்க இயலவில்லை.
“போக்கிரி” இனத்தின் ஆயுதம் குறித்த வியப்பு அடங்க வெகு நேரமாகிறது.
ஆச்சி மனோரமா போக்கிரி வேடத்தில் நடித்ததே என் கண் முன் விரிந்தது.
பாவ மூட்டையின் எண் :188 :
பாவம் தொலைக்கச் செல்லும் இடமாக கருதப்படும் காசிக்கு அன்றைய காலகட்டத்தில் பயணம் செய்யப்பட்ட அனுபவப் பகிர்வே இக்கட்டுரை…
கட்டுரையின் தலைப்பிற்கான காரணமே அலாதியானது…
புகையிலை விடு தூது :
தூது இலக்கியங்களிலிருந்து வித்தியாசமான ஒரு தூது இலக்கியம் பற்றிய கட்டுரை..
நகைச்சுவை உணர்வு பளிச்சிட அரிய பல தகவல்களுடன் பயணிக்கிறது இக்கட்டுரை.
சீனிச் சர்க்கரைப் புலவர் இயற்றிய இந்நூலை பதிப்பித்தவர் உ.வே.ச என்பது கூடுதல் ஆச்சரியம் தரும் தகவலாக உள்ளது.
வவுச்சரின் வரலாறு :
இன்று பரவலாக பயன்பாட்டிலுள்ள வவுச்சர் குறித்த வரலாறு பிரமிக்கத்தக்கது.
முதன்முறையாக சென்னைக்கு மனு கொடுக்கச் சென்றது யார் என்பதற்காக தொடங்கிய தேடல்… வவுச்சரில் முடிவது சிறப்பியல்பு..
சொந்த மக்களே அழிக்கும் மதுரை கோட்டை குறித்த வரலாறு ஆசையைத் தூண்டி துயரத்தில் ஆழ்த்துகிறது.
கீழடி : புனைவும் அரசியலும்
டிசம்பர் 2018 இல் எழுதப்பட்ட கட்டுரை.
கீழடி அகழாய்வு தொடர்ந்து நிகழ்த்துவதற்கான பெருங்குரலை எழுப்புகிறது இக்கட்டுரை.
“நாகமுனி” என்று சிறுவனின் வாயிலாக கீழடியில் கிடைத்த செங்கல்லில் காணப்பட்ட விலங்கின் கால்தடத்தை அறிந்த தகவல் பிரமிப்பின் உச்சம்.
நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் :
தாது வருடத்தில் நிகழ்ந்த நல்லதங்காள் கதைக்கான மூல வித்தான பஞ்சம் குறித்த வரலாறு நமது கண்ணைப் பஞ்சடைக்க வைத்துக் கண்ணீர் சிந்த வைக்கிறது.
பச்சைப் புடவையைக் குறியீடாக பயன்படுத்திய உத்தி பிரமாதம்.
பென்னிகுவிக்கை போற்றும் சமூகத்தை சிறுபஞ்சமூல பாடல் மூலம் சிந்திக்க வைப்பது கனக்கச்சிதம்.
அடுப்பங்கரை ஆவணம் :
1891 இல் இராமச்சந்திர ராயரால் 400 பக்க அளவில் எழுதப்பட்ட “இந்து பாகசாஸ்திரம்” பற்றிய கட்டுரை.
பாத்திரங்கள் {படங்களுடன் (100)}, தண்ணீர், உணவுப் பொருட்கள் தயாரிப்பு, அடுப்புகள், எரிகட்டைகள், உணவு பரிமாறும் முறை என யாவற்றையும் பகர்கிறதாம் இந்நூல்.
இப்புத்தகம் எழுதுவதற்காக அவர் கூறும் காரணமே பெண்ணியச் சிந்தனையை தூண்டுவதாக உள்ளது. இரண்டையும் இணைக்கும் மையப்புள்ளியே இக்கட்டுரை சமூகச் சிந்தனைப் புள்ளியில் நம்மை பயணிக்க அழைக்கிறது.
மாயக்காளின் காலடியில் ரோசாப்பூ :
தமிழகத்துப் போலீஸ் தாக்குதலில் பலியான முதல் பெண் மாயக்காள் என்ற செய்தியுடன் தொடங்கி ஜார்ஜ் ஜோசப்புடன் பயணித்து குற்றப் பரம்பரைச் சட்டத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
இன்றைய சூழலுடன் மிகவும் நெருக்கமாக பயணிக்கும் கட்டுரை…
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து ஓராண்டிற்குப் பின்னர் தமிழகத்தில் திருமங்கலம் பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த படுகொலையைப் பற்றிய ஆவணப் பதிவின் பிரதிபலிப்பே இக்கட்டுரை.
குழூஉக்குறி :
மாட்டுச் சந்தையில் தொடங்கி வியாபாரிகள் பயன்படுத்தும் வியாபாரக் குறியீடுகளை நோக்கி பயணிக்கிறது இக்கட்டுரை.
சிறுவயதில் நாம் துணிக்கடை மற்றும் பாத்திரக் கடைகளில் கண்ட விலையை சந்கேதக் குறி கொண்டு மறைத்து வைத்து விலையைக் குறைக்க உதவும் யுக்தி நம் கண்முன்னே வந்து செல்வதைத் தவிர்க்க இயலாது.
துணியால் மறைத்து கைவிரல்களால் மாட்டின் விலை பேசும் குறியீட்டை நமது ஞாபக அறையிலிருந்து கீறி விடுகிறது இக்கட்டுரை .
தூசி. இராஜகோபால பூபதி 100 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய “பலவித வர்த்தகர்களின் பரிபாஷை அல்லது குழூஉக்குறி” என்று நூல் வாயிலாக பயணிக்கிறது இக்கட்டுரை.
குற்றமும் தண்டனையும் :
பழங்காலத்தில் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் குறித்த தண்டனைகளைப் பற்றி பேசுகிறது இக்கட்டுரை.
கௌடலீயம், சுக்கிரநீதி போன்ற பழைய சட்டத்திட்டங்களுடன் தொடங்கி 1861 இல் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டத்துடன் பயணித்து ‘ எழுவம்பட்டி ஏட்டுச் சட்டம்” என்று காணக் கிடைக்காத ஓலைச்சுவடி தேடலின் வெற்றியுடன் நிறைவு பெறுகிறது இக்கட்டுரை.
மோசடிப் புத்தகம் :
“மோடி மஸ்தான் வேலை” என்ற சொல்லிலிருந்து வந்ததாக அறியப்படும் மோசடி குறித்த கட்டுரை நமது சமூக அவலத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
1907 ஆம் ஆண்டு ராஜகோபால பூபதி என்பவரால் எழுதி வெளியிடப்பட்ட “மதிமோச மயக்கம்” நூலின் தகவல்கள் வாயிலாக மோசடி குறித்தப் புரிதலை பகர்கிறது இக்கட்டுரை.
முத்தாய்ப்பாக இந்நூலை மூன்றாம் பதிப்பின் போது வேறொரு பதிப்பகத்தால் மோசடியாக வேறொரு பெயரில் வெளியிடப்பட்டதாக நிறைவுறுகிறுது இக்கட்டுரை.
இது விமர்சனமன்று.
நான் இந்நூலைப் படித்துப் பெற்ற வாசித்தனுபவத்தின் சிறு பகிர்வே இது.
படிக்க விரும்புபவர்களுக்கு சிறு அறிமுகமாக அமையட்டும் என்பதற்கான முயற்சியே இது.