லத்தி பிடித்த கையில் மருந்து சீட்டு ,ஊசி✍️ தமிழக காவல்துறையில்இரண்டாம் நிலை காவலர் MBBS மருத்துவர் மாணவர் ஆகிறார்
தர்மபுரி: தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றி வரும் இளையர் தனது தீவிர முயற்சியால் மருத்துவப் படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். கடந்த 2016ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், பின்னர் வேதியியல் துறையில் பிஎஸ்சி பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
அதை வெற்றிகரமாக முடித்த நிலையில், அரசுப் பணியில் சேர வேண்டும் என்று முடிவெடுத்த சிவராஜ், 2020ஆம் ஆண்டில் காவலர் பணிக்கான தேர்வை எழுதி அதிலும் தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்த போதிலும், மருத்துவராக வேண்டும் என்பதே சிவராஜின் விருப்பமாக இருந்தது. அவரது சிறு வயது கனவும் இதுதான்.
காவலராகப் பணியாற்றியபடியே மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை எழுத முடிவெடுத்தார் சிவராஜ். அதற்காக தீவிரமாகப் படித்தார்.
எனினும் கடந்த ஆண்டு நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் அவருக்குப் போதுமான மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. மனம் தளராத அவர், நடப்பாண்டில் நடைபெற்ற தேர்விலும் நம்பிக்கையுடன் பங்கேற்றார். இம்முறை அவரது முயற்சி வீண் போகவில்லை.
மொத்தம் 400 மதிப்பெண்களைப் பெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் கீழ் சிவராஜுக்கு மருத்துப் படிப்பை மேற்கொள்ள இடம் கிடைத்துள்ளது.
இதன் மூலம், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அவர் மருத்துவம் படிக்க உள்ளார். காவல் பணியைக் கைவிட்டு, மருத்துவப் படிப்பை தொடர திட்டமிட்டுள்ளதாக சிவராஜ் கூறியுள்ளார்.
மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாக படித்து வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.