விருதுநகரில் தொழிலதிபரும் மருதுசேனை மாநில நிர்வாகி குமரன் என்ற குமரவேல் கொலை; 15 பேர் மீது வழக்கு,
விருதுநகர் தொழில் அதிபரும் மருது சேனை மாநில நிர்வாகி குமரன் என்ற குமரவேல் கொலை வழக்கில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் பிடிபட்ட னர். அமைக்கப்பட்டுள்ளன.
தொழில் அதிபர் கொலை
விருதுநகரை சேர்ந்த தொழில் அதிபரும், நகராட்சி குத்தகைதாரருமான குமரவேல் என்ற (வயது 47) நேற்று முன்தினம் விருதுநகர் தேசபந்துதிடல் அருகே உள்ள அவரது அலுவலகத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். அப்போது அவரது அலுவலகத்தில் இருந்த அவரது உறவினர்கள் ரூபி மகாலிங்கம், ராம்குமார் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
போலீசில் புகார்
இந்த சம்பவம் குறித்து ரூபி மகாலிங்கம் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது உறவினர் குமரவேலுக்கும், விருதுநகர் அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்த சகோதரர்களான சேகர் என்ற சந்திரசேகர், ஞானசேகரன், விக்ரமன் மற்றும் ஞானசேகரின் மகன் வினித் ஆகியோருக்கும் விருதுநகர் நகராட்சி ஒப்பந்தம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 18-ந் தேதியன்று வினித் ஒரு கொலை வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீனில் காரைக்குடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வந்தார். அப்போது மருதுசேனை அமைப்பின் தலைவரான ஆதிநாராயணனின் கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டார்.
பயங்கர ஆயுதங்கள்
இந்த வழக்கில் குமரவேல் சேர்க்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணைக்குப்பின் அந்த வழக்கிலிருந்து குமரவேல் நீக்கப்பட்டார். இதனால் ஞானசேகரன் குடும்பத்தாருக்கும், குமரவேலுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று நான், குமரவேல், ராம்குமார் ஆகியோர் அலுவலகத்தில் இருந்தோம். அப்போது, ராம்குமாருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அவர் போனில் பேசிக் கொண்டு வெளியே சென்றார்.
சிறிது நேரத்தில் அவர் பதற்றத்துடன் வந்து ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வருவதாக குமரவேலிடம் தெரிவித்தார். அதற்குள் விருதுநகரை சேர்ந்த பால்பாண்டி என்ற பவர் பாண்டி, அரவிந்தராஜ் என்ற சேவு, 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உள்பட 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் அலுவலக கண்ணாடி கதவை உடைத்து விட்டு அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
தப்பி ஓட்டம்
அறைக்குள் நுழைந்த அந்த கும்பல் வினித்தை கொலை செய்த குமரவேல் இங்கு தான் உள்ளார் என சொல்லிக் கொண்டே குமரவேலை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க முயன்ற என்னையும், ராம்குமாரையும் வெட்டிவிட்டு நீங்களும் அவருடன் சேர்த்து செத்து விடாதீர்கள் என்று மிரட்டிவிட்டு வெளியே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களில் காத்திருந்த 2 பேருடன் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குமரவேல் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
15 பேர் மீது வழக்கு
இதையடுத்து விருதுநகரை சேர்ந்த பால்பாண்டி என்ற பவர் பாண்டி, அரவிந்தராஜ் என்ற சேவு, மையிட்டான் பட்டியைச் சேர்ந்த சேகர் என்ற சந்திரசேகர், ஞானசேகரன், விக்ரமன், விக்ரமனின் மகன்கள் ஹரிஹரன், சிவப்பிரகாஷ் விருதுநகரை சேர்ந்த சகோதரர்கள் அமிர்தராஜ், அமிர்தசங்கர் உள்பட 15 பேர் மீதும் விருதுநகர் மேற்கு போலீசார் கொலை, கொலை மிரட்டல் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 15 பேரையும் பிடிக்க மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கண்காணிப்பில் 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
2 பேர் சிக்கினர்
இதற்கிடையே தொழில்அதிபர் குமரவேல் கொலையில் தொடர்புடைய 2 பேர் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. தகவல் அறிந்தவுடன் விருதுநகர் தனிப்படை போலீசார் உடனடியாக சங்ககிரி வந்து கொலையில் சம்பந்தப்பட்ட 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பிடிபட்ட 2 பேரின் பெயர், அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.