ஓட்டப்பிடாரத்தில் முன்விரோதம் காரணமாக மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை – 24 மணி நேரத்தில் கொலையாளி கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
முன்விரோதம் காரணமாக மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை – 24 மணி நேரத்தில் கொலையாளி கைது
✍தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் நேற்று நடந்த கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
✍தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வடக்கு ஆவரங்காடு நடுத்தெரு பகுதியில் நேற்று (07.02.2021) இரவு கயத்தாறு சொக்கந்திரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் அரிகிருஷ்ணன் (40) என்பவர் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சங்கர், ஃப்ரெட்ரிக் ராஜன், தலைமைக்காவலர் மணிகண்டன், முதல்நிலைக் காவலர்கள் கொடிவேல், ராஜா, காவலர்கள் விசு மற்றும் பாரதி கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கொலை செய்தவர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் ஒட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படையினர் தேடி வந்ததில் இன்று (08.02.2021) வெள்ளாரத்திலிருந்து எப்போதும்வென்றான் செல்லும் ரோட்டில் வடக்குவாச் செல்லியம்மன் கோவில் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர். கொலை செய்யப்பட்ட அரிகிருஷ்ணன் என்பவருக்கும் ஓட்டப்பிடாரம் வடக்கு ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் முத்துமாரியப்பன் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (07.02.2021) இரவு அரிகிருஷ்ணன் வடக்கு ஆவரங்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த முத்துமாரியப்பன், அரிகிருஷ்ணனை வழிமறித்து தகராறு செய்து மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் முத்துமாரியப்பனை கைது செய்து, அவரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
கொலை நடந்து 24 மணி நேரத்தில் சம்மந்தபட்ட கொலையாளி முத்துமாரியப்பனை விரைந்து கைது செய்த தனிப்படையிரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.