பாம்பு கடத்தும் பல மாநிலத்தை சேர்ந்த கும்பல் பிடிபட்டது; ஆறு பேர் சிறையில்
களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் மண்ணுளிப் பாம்பு கடத்தல் கும்பல் ஒன்று செயல்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து வனத்துறை அதிகாரிகள் பல இடங்களிலும் பரிசோதனை நடத்தி வந்தனர்.
தனி இடம் ஒன்றில் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு காரின் அருகே ஆறு பேர் ரகசியமாக பேசிக் கொண்டு இருந்ததைக் கண்ட அதிகாரிகள் அவர்களை மடக்கி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் சிக்கிய அந்த நபர்கள் தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்களில் ஒருவரான தனீஸ் என்பவர் தன்னிடம் உள்ள மண்ணுளிப் பாம்பை ரூ.10 லட்சம் விலைக்கு விற்க பேரம் பேசிக்கொண்டு இருந்தது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
அதையடுத்து தனீஸ், ஷன்னி, அர்சத், முத்துசாமி, முருகேசன், ஐயப்பன் ஆகிய அந்த ஆறு பேரையும் கைது செய்து அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
பிடிபட்டவர்களுக்கு வயது 27 முதல் 55 வரை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த ஆறு பேரிடம் இருந்து கார், கைப்பேசிகள், மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டன. தனீஸ் வசம் ஏராளமான மண்ணுளிப் பாம்புகளின் புகைப்படங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
மேலும் விசாரணை நடத்திய அதிகாரிகள் முத்துசாமி தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஐந்து அடி மண்ணுளிப் பாம்பை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட நபர்களுக்கும் வெளிமாநில கடத்தல் கும்பல்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்து இருக்கிறது.
இதன் தொடர்பில் இதர சிலரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
மண்ணுளிப் பாம்புகள் உள்ளிட்ட அரிய வகை பாம்புகளைக் கடத்தி விற்க பல மாநிலங்களைச் சேர்ந்த கும்பல்கள் செயல்பட்டு வருவதாகவும் இதன் தொடர்பில் விசாரணைகளைத் தாங்கள் தீவிரப்படுத்தி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.