கோவில்பட்டி தனியார் நூற்பாலையில் ரூ.1.46 கோடி மோசடி நடந்தது தொடர்பாக துணைத்தலைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது ✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி நூற்பாலையில் ரூ 1 கோடியே 46 லட்சம் மோசடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி தனியார் நூற்பாலையில் ரூ.1.46 கோடி மோசடி நடந்தது தொடர்பாக துணைத்தலைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.1.46 கோடி மோசடி
மதுரை டி.பி.கே. சாலை சாய்பாபா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமோகன் (வயது 50). இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் ஏற்றுமதி ஆடைகள் பிரிவில் துணைத்தலைவராக பணியாற்றினார். இங்கு உற்பத்தி செய்யப்படும் நூல், துணிகள், ஆடைகள் போன்றவற்றை அமெரிக்க நாட்டில் உள்ள நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்தனர்.
இந்த நிலையில் அமெரிக்க நாட்டுக்கு ஏற்றுமதி செய்த நூல், துணிகள், ஆடைகள் போன்றவற்றை உரிய நிறுவனத்துக்கு வழங்காமல் மோசடி நடந்தது தெரியவந்தது. இதனால் நூற்பாலைக்கு ரூ.1 கோடியே 46 லட்சம் வருமான இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
துணைத்தலைவர் கைது
விசாரணையில், நூற்பாலை நிறுவன துணைத்தலைவர் கிருஷ்ணமோகன், திருப்பூர் தனியார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி லோகநாதன் (49), இவருடைய மனைவி பிரியா ஆகியோருடன் சேர்ந்து முறைகேடாக மோசடி செய்து நூற்பாலைக்கு ரூ.1.46 கோடி வருமான இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணமோகன், லோகநாதன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான பிரியாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.