அரிசி ஏற்றுமதிக்கு இந்தியாவின் தடையால் அமெரிக்காவில் நெருக்கடி,அனைத்துலக அளவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?
கலிபோர்னியா: கனமழை காரணமாக இந்தியாவில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு அந்நாடு தடை விதித்துள்ளது. இதனால் பல நாடுகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் உள்ள இந்தியக் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அரிசி வாங்க வரிசை பிடித்துக் காத்து நிற்கின்றனர்.
இதனால், அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு அரிசிப் பை என்ற வரம்பில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றன
அரிசிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவில் பல கடைகள் அரிசி விலையை உயர்த்தி வருகின்றன. முன்பு 22 டாலராக இருந்த அரிசிப் பையின் விலை தற்போது 47 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 10 நாள்களில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமாக அரிசி விலை ஏறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 விழுக்காடாக உள்ளது. இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தச் சூழலில் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதால் அனைத்துலக அளவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் துருக்கி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீவிரமாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக அனைத்துலக அளவில் கோதுமை விலை அதிகரித்துள்ளது. தற்போது, இந்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது.