பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் ரிஷி சுனக்✍️”தவறுகளை சரி செய்வதற்காக நான் நியமிக்கப்பட்டேன்” – இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக்கின் முதல் உரை!✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் மோசமான பொருளியல் நெருக்கடியில் உள்ளது. கொவிட்-19ன் பாதிப்பின் அதிர்வலைகளை இன்னமும் உணரமுடிகிறது என்று தாம் பிரதமராக ஆற்றிய முதல் உரையில் அவர் குறிப்பிட்டார். சில முக்கியமான முடிவுகளை தாம் எடுக்கவேண்டும் என்று கூறிய அவர் நாட்டை ஒற்றுமைபடுத்த உறுதியளித்தார்.
புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு பிரிட்டிஷ் மன்னர் சார்லசின் அழைப்பை தாம் ஏற்றுள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் கூறினார். இவர் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.200 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக இளையவர் திரு சுனக்.
திரு சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷயா மூர்த்தி ஆகியோரின் மொத்த சொத்தின் மதிப்பு 800 மில்லியன் டாலர். பிரிட்டனில் இருக்கும் 250 செல்வந்தர்களில் இவர்களும் அடங்குவர் என்று டைம்ஸ் ஆஃப் லண்டன் நாளிதழ் தகவல் அளித்துள்ளது.
திரு சுனக் இங்கிலாந்தில் பிறந்தவர். அவருடைய தந்தை ஒரு மருத்துவர், தாயார் மருந்தகம் நடத்திவந்தார். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களில் படித்து திரு சுனக் தேர்ச்சிபெற்றுள்ளார். வங்கியில் வேலைபார்த்த அவர், 2015ல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்து பேசினார். அப்போது, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவித்தார்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை, ‘இது இங்கிலாந்துக்கு ஒரு புதிய விடியல்’ என்று டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.பிரதமராக அறிவிக்கப்பட்ட பின் முதன்முறையாக ரிஷி சுனக் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது நமது நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.ரஷிய அதிபர் புதின் தொடுத்துள்ள உக்ரைன் போர், உலகம் முழுவதும் சந்தைகளை சீர்குலைத்துள்ளது.
நாட்டின் பொருளாதார இலக்குகளை அடைய,லிஸ் டிரஸ்(முன்னாள் பிரதமர்) வேலை செய்ய தவறவில்லை. அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். ஆனால் சில தவறுகள் நடந்தன.
நான் தவறுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்டேன். நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன். அதை செய்ய நாள்தோறும் உழைப்பேன். நம்பிக்கை எனக்கு கிடைத்தது, இன்னும் நம்பிக்கையை சம்பாதிப்பேன்… நம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் சொந்தமானது, நம்பிக்கை தான் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து, புதன்கிழமை(நாளை) இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் “பிரதமரின் கேள்விகள்” நிகழ்ச்சியில் ரிஷி சுனக் உரையாற்ற உள்ளார்.