48ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் நீக்கம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு
தெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஊழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் 49 ஆயிரத்து 340 பேர் பணியாற்றும் தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தில் அரசின் எச்சரிக்கைக்குப் பின்னர் வெறும் ஆயிரத்து 200 பேர் மட்டுமே பணிக்குத் திரும்பினர். இதனால் அம்மாநிலத்தில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது.
இந்நிலையில் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அரசின் அறிவிப்புக்குப் பின்னரும் பணிக்கு வராதவர்கள் வேலை இழந்ததாகக் கருதப்படுவார்கள் என்று கூறிய அவர், போக்குவரத்துக் கழகம் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் இருக்கும் போது, வேலைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும், தசரா உள்ளிட்ட பண்டிகைக் காலகட்டத்தில் வேலைநிறுத்தம் செய்வது பெரும் குற்றம் என்றும் தெரிவித்தார்.
மேலும் போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார். தொடர்ந்து பேசிய அவர், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்றும், புதிதாகச் சேர்க்கப்படுபவர்கள் எந்த தொழிற்சங்கத்திலும் சேரமாட்டோம் என உறுதியளித்த பின்னர் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்